முதல்வரா இவர், முதலில் டிஸ்மிஸ் செய்யுங்கள்.. அன்புமணி "அட்டாக்"!
சென்னை: தான் முதல்வர் என்பதை ஓ.பன்னீர் செல்வமே ஏற்றுக் கொள்ளவில்லை. இப்படிப்பட்ட முதல்வர் பதவியில் நீடிக்கக் கூடாது. அவரை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
சென்னையில் இன்று காலை பாமக நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. அதன் பின்னர் செய்தியாளர்களிடம் அன்புமணி பேசுகையில், பன்னீர்செல்வமே, தான் முதல் அமைச்சர் என்பதை நம்பாமல் இருக்கிறார். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மிகவும் மோசமாக இருக்கிறது. முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை ஆளுநர் பதவி நீக்கம் செய்ய வேண்டும்.
காவிரியில் கர்நாடக அரசு அணை கட்டுவதை தடுக்க, தமிழக அரசு இதுவரை அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டவில்லை. ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கு காரணமாகவே கர்நாடக அரசு மற்றும் மத்திய அரசுக்கு எதிராக எந்த நடவடிக்கையையும் தமிழக அரசு எடுப்பதில்லை.
நிலம் கையக்கப்படுத்தும் சட்டத்தை கடுமையாக எதிர்த்த அதிமுக, இப்போது ஆதரவு கொடுக்க என்ன காரணம்.
நெல்லை வேளாண் அதிகாரி முத்துக்குமாரசாமி மரணம் விவகாரத்தில் தமிழக அரசு மீதான நம்பிக்கையை பொதுமக்கள் முற்றிலும் இழந்துள்ளனர். இதனாலேயே இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்று பாமக வலியுறுத்தி வருகிறது என்றார் அன்புமணி ராமதாஸ்.