2016 தேர்தலில் அன்புமணி தலைமையில் அமைவது பாமக ஆட்சியாக நடைபெறாது... ராமதாஸ் திடீர் குண்டு!
சென்னை: சட்டசபைத் தேர்தலில் பாமக வெற்றி பெற்று அன்புமணி தலைமையில் நடைபெறும் ஆட்சி, பெண்களுக்கான ஆட்சியாக இருக்கும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் பாமகவின் முதல்வர் வேட்பாளராக அன்புமணி ராமதாஸ் அறிவிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், சென்னை சேப்பாக்கம் சிவானந்தா சாலையில் உள்ள அண்ணா கலையரங்கத்தில் மகளிர் தொண்டு நிறுவனத்தின் ஆலோசனை கூட்டம் அதன் தலைவர் எம்.ஜி.சாந்தகுமாரி தலைமையில் நடைபெற்றது.
அக்கூட்டத்தில், சிறப்பு அழைப்பாளர்களாக பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.
அப்போது விழாவில் ராமதாஸ் பேசியதாவது:-
|
பெண்களுக்கான ஆட்சி...
தேர்தலுக்காக பேசுபவர்கள் நாங்கள் அல்ல. வரப்போகும் 2016 சட்டசபைத் தேர்தலில் அன்புமணி தலைமையில் அமையும் ஆட்சி பா.ம.க. ஆட்சியாக நடைபெறாது. அது பெண்களுக்கான ஆட்சியாகத்தான் நடக்கும்.
கடுமையான சட்டங்கள்...
பெண்களுக்கு எதிராக எங்கு என்ன பிரச்சினை நடந்தாலும் அன்புமணி ஆட்சியில் அது தீர்க்கப்படும். அன்புமணி ஆட்சியில் பெண்களுக்கான பிரச்சினைகள் எதுவும் நடக்காது. அவ்வாறு நடந்தால் அதை தடுக்க கடுமையான சட்டங்கள் கொண்டு வரப்படும்.
பெண்களுக்கு முன்னுரிமை...
அன்புமணி ஆட்சியில், பெண்களுக்கு எல்லா வகையிலும் முன்னுரிமை கொடுப்போம். பெண்களுக்கு உலகத் தரம் வாய்ந்த கல்வியுடன், வேலைவாய்ப்பில் முன்னுரிமை கொடுப்போம்.
முதல் கையெழுத்து...
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைய வேண்டும் என்றால் மதுவிலக்கு கொண்டு வர வேண்டும். அதை, அன்புமணி ராமதாஸ் பேசும்போதே, பா.ம.க. ஆட்சியின் முதல் கையெழுத்து பூரண மதுவிலக்கு குறித்து தான் என்று பேசினார்.
மது விலக்கு...
இதை அவர் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட முதல் கூட்டத்திலேயே கூறிவிட்டார். அதன் பிறகுதான் இப்போது எல்லோரும் மதுவிலக்கு! மதுவிலக்கு! என்று பேசி வருகின்றனர்.
33 சதவீத இடஒதுக்கீடு...
பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீடு மசோதா, நாடாளுமன்றத்திலும், சட்டமன்றத்திலும் வந்து, வந்து போகும் மசோதாவாக இருக்கிறது. அன்புமணி ஆட்சி அமைந்தால் 33 சதவீத இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்படும்.
வேலைவாய்ப்பு...
மகாத்மா காந்தி கூறியது போன்று, நள்ளிரவில் ஒரு பெண் தன்னந்தனியாக வீட்டுக்கு செல்லும் நிலை அன்புமணி ஆட்சி காலத்தில் வரும். அவரது ஆட்சி காலத்தில் யாரும் சும்மா இருக்கிறோம் என்று சொல்லாத அளவுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கி தருவோம்' என இவ்வாறு அவர் தெரிவித்தார்.