கரூர் அன்புநாதன் எங்கே? 3 மாவட்டங்களில் தனிப்படை போலீஸ் தீவிர தேடுதல்- தாய்லாந்தில் பதுங்கல்?
சென்னை: தலைமறைவாக உள்ள கரூர் அதிமுக பிரமுகர் அன்புநாதனை 3 மாவட்டங்களில் தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
சட்டசபை தேர்தலின் போது நடத்தப்பட்ட சோதனையில் அன்புநாதன் வீட்டில் ரூ5 கோடியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர்.
இப்பணம் குறித்து முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வாநதனின் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் அன்புநாதன் வீட்டில் சிக்கிய பணம், நத்தம் விஸ்வநாதனுடையது என்பது கண்டுபிடிக்கப்பட்டது.
அப்போதே நத்தம் விஸ்வநாதன் கைது செய்யப்படலாம் என கூறப்பட்டது. அதேபோல் அன்புநாதனும் கைது செய்யப்படக் கூடும் எனவும் கூறப்பட்டது.
இந்த நிலையில் அன்புநாதன் திடீரென தலைமறைவாகிவிட்டார். தற்போது அன்புநாதனை பிடிக்க 3 தனிப்படை போலீஸ் அமைக்கப்பட்டுள்ளது. கோவை, கரூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் பதுங்கியுள்ள அன்புநாதனை பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
இதனிடையே அன்புநாதன் தாய்லாந்துக்கு தப்பி ஓடி தலைமறைவாகிவிட்டதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன. தாய்லாந்தில் அவர் பதுங்கி இருந்தால் இண்டர்போல் போலீஸ் உதவியுடன் அவரை கைது செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.