செங்காவி குழம்பால் ஆன 4 ஆயிரம் ஆண்டுகள் பழமையான ஓவியங்கள்- பழனியில் கண்டுபிடிப்பு
பழனி: பழனியருகே மேற்குத்தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள கோம்பைப்பட்டியில் 4 ஆயிரம் வருடங்கள் பழமையான குகை ஓவியங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
பழனி அருகே கோம்பைபட்டி பகுதியில் பளியர் இன குடியிருப்பு பகுதி உள்ளது.
இங்கு தொல்லியர் ஆய்வாளர் நாராயணமூர்த்தி தலைமையில் ஆய்வு செய்யப்பட்டது.
பளியர் இனத்தவரின் ஓவியங்கள்:
அப்போது பழங்குடி இனத்தை சேர்ந்த பளியர்கள் வரைந்த பழங்கால பாறை ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டது. இவை சுமார் 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வரையப்பட்டவை என வரையறுக்கப்பட்டு உள்ளது.
ரத்தச் சிவப்பு நிற ஓவியங்கள்:
இதுகுறித்து கூறிய தொல்லியர் ஆய்வாளர் நாராயணமூர்த்தி, "தற்போது கண்டு பிடிக்கப்பட்டு உள்ள ஓவியங்கள் பளியர் குடியிருப்பு மேல்புறம் உள்ள குகை போன்ற அமைப்புடைய பாறைகளில் வரையப்பட்டு உள்ளது. ரத்த சிவப்பு நிறத்தில் வரையப்பட்ட இந்த ஓவியங்கள் தற்போது மங்கி செங்காவி நிறமாக உள்ளன.
அழியும் நிலையில்:
இந்த ஓவியங்கள் அழியும் நிலையில் காணப்படுகிறது. சில ஓவியங்கள் முற்றிலும் அழிந்துவிட்டன. ஒரு ஓவியத்தில் ஒரு விலங்கின் மேல் 2 மனிதர்கள் அமர்ந்து இருப்பது போன்று வரையப்பட்டு உள்ளது.
இரண்டு மனிதர்கள்:
மற்றொரு ஓவியத்தில் ஒரு மனிதனின் தோள் மீது மற்றொரு மனிதன் ஏறி நிற்பது போல் வரையப்பட்டு உள்ளது.
போரின் வெற்றி:
மேலும் ஒரு மனிதன் தனது வலது கையில் கோடாரியை ஏந்தியிருப்பது போன்றும் அந்த மனிதனின் காலடியில் மற்றொரு மனிதன் வீழ்ந்து கிடப்பது போன்றும் வரையப்பட்டு உள்ளது. இது போரின் வெற்றியைக் குறிக்கின்றது.
சைவ சமய வழிபாடு:
அடுத்த ஓவியத்தில் ஒரு நீண்ட கோட்டின் இருபுறமும் சூலாயுதம் வரையப்பட்டு உள்ளது. சூலாயுதம் என்பது சைவ வழிபாட்டை குறிக்கும் சின்னம்.
கைகளால் வரைந்த ஓவியங்கள்:
இந்த சின்னம் பழங்குடி இன மக்களின் பாதுகாப்பு சடங்குகள் தொடர்பானவையாகும். மற்றொரு ஓவியம் மனிதனின் கை ஓவியம் ஆகும். செங்காவி குழம்பில் கையை பதித்து அந்த கையை பாறைகளில் பதிய வைத்தது போல் உள்ளது.
பழமையின் உரைகல்கள்:
இது போன்ற ஓவியங்கள் இந்தோனேஷியா, பிலிப்பைன்ஸ், தென்னாப்பிரிக்கா, பிரான்ஸ், ஜிம்பாப்வே உள்ளிட்ட நாடுகளிலும் காணப்படுகிறது. மிகவும் பழமை வாய்ந்த இந்த ஓவியங்களை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.