ஆந்திராவில் 20 தமிழர்கள் படுகொலை: சிபிஐ விசாரணை கேட்ட சீமான் மனு ஹைகோர்ட்டில் தள்ளுபடி
சென்னை: ஆந்திர துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட கோரிய, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
ஆந்திராவின் சித்தூர் மாவட்ட வனப்பகுதியில், செம்மரம் வெட்டி கடத்த முற்பட்டதாக தமிழகத்தை சேர்ந்த 20 கூலித் தொழிலார்களை ஆந்திர போலீசார் ஈவு, இரக்கமின்றி சுட்டு பொசுக்கியுள்ளனர்.
இந்த சம்பவத்தில் ஆந்திர போலீஸ், போலி என்கவுண்டர் நடத்தியுள்ளதற்கான பல்வேறு ஆதாரங்கள் வெளியான வண்ணம் உள்ளன.
இந்நிலையில், வழக்கை சிபிஐ விசாரித்தால்தான் நியாயம் கிடைக்கும் என்ற நோக்கத்திற்காக, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், சென்னை ஹைகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். சிபிஐ விசாரணை மட்டுமின்றி, இறந்தவர் குடும்பத்துக்கு நஷ்ட ஈடு வழங்க அரசை உத்தரவிடவும் அவர் தனது மனுவில் கேட்டுக் கொண்டிருந்தார்.
இந்த மனுவை இன்று விசாரித்த, நீதிபதிகள், மாலா, சிவஞானம் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், தள்ளுபடி செய்தது.
உச்சநீதிமன்றம் மற்றும் ஆந்திர ஹைகோர்ட்டில் இந்த வழக்கு நிலுவையில் உள்ளதால், சென்னை ஹைகோர்ட்டிலும் தனியாக விசாரணை தேவையில்லை என்று கூறி, சீமான் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. அதேநேரம்., ஆந்திர ஹைகோர்ட்டில் நடக்கும் வழக்கில், சீமான் தன்னையும் மனுதாரராக இணைத்துக்கொள்ள மனு தாக்கல் செய்துகொள்ளலாம் என்று ஹைகோர்ட் அறிவுறுத்தியுள்ளது.