சென்னை மீனவர்களின் பிரச்சினைக்கும், சந்திரபாபு நாயுடு கட்சி எம்.எல்.ஏக்களுக்கும் என்ன சம்பந்தம்?
சென்னை: சென்னையில் கரிக்காட்டு குப்பம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் தங்களது பிரச்சினைக்காக ஆந்திராவைச் சேர்ந்த சந்திரபாபு நாயுடு கட்சியான தெலுங்கு தேசம் கட்சி எம்.எல்.ஏக்களை சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்குக் கூட்டி வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
மீனவப் பெண்களுடன் தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏக்கள் ராமகிருஷ்ணா, மஸ்தான் ராவ் ஆகியோரும் வந்தனர். இவர்கள் போலீஸ் கமிஷனர் ஜார்ஜை நேரில் சந்தித்து மனு ஒன்றை அளித்தனர்.
சென்னை நீலாங்கரை அருகே உள்ள கரிக்காட்டு குப்பம் மீனவர் கிராமத்தைச் சேர்ந்த ஏராளமான பெண்கள் மற்றும் ஆண்கள் நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்தனர். அவர்களுடன் இந்த ஆந்திர எம்.எல்.ஏக்களும் வந்திருந்தனர். பின்னர் இரு தரப்பும் தனித் தனியாக கமிஷனரிடம் புகார் மனுக்களை அளித்தது.
அதன் பின்னர் இரு எம்.எல்.ஏக்களும் செய்தியாளர்களிடம் பேசுகையில், கரிக்காட்டு குப்பம் மீனவர் கிராமத்தையொட்டி கடற்கரை பகுதியான சுமார் 2 ஏக்கர் நிலத்தை சிலர் போலி பட்டா தயாரித்து ஆக்கிரமித்து சுவர் எழுப்பி விட்டனர். ரூ.16 கோடி மதிப்புள்ள இந்த நிலம் ஜமீன்தார் ஒருவரால் அங்குள்ள கோவிலுக்கு தானமாக கொடுக்கப்பட்டது.
அந்த இடத்தில் மீனவர்கள் தங்களது படகுகளை நிறுத்தி இருந்தனர். ஆக்கிரமிக்கப்பட்டதால் மீனவர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். அங்கு எங்களுக்கு சொந்தமான இறால் பண்ணையும், விருந்தினர் இல்லமும் உள்ளது. ஆக்கிரமிப்பு காரணமாக எங்களால் அங்கு செல்ல முடியவில்லை.
நில ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மீது கானாத்தூர் போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. ஆனால் போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. கடற்கரை நிலத்தை ஆக்கிரமித்தவர் பிரபல அரசியல் கட்சியைச் சேர்ந்தவர் என்பதால் உள்ளூர் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என்றார் அவர்.