ஜெ.வுக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் ஆஞ்ஜியோ பரிசோதனை நடத்தப்பட்டது- மருத்துவர்கள் தொடர் கண்காணிப்பு!
ஜெயலலிதாவுக்கு நேற்று ஆஞ்ஜியோ பரிசோதனை நடத்தப்பட்டது.
சென்னை: முதல்வர் ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் அவருக்கு ஆஞ்ஜியோ பரிசோதனை நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து மருத்துவர்களின் தொடர் தீவிர கண்காணிப்பில் ஜெயலலிதா இருந்து வருகிறார்.
சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதல்வர் ஜெயலலிதாவுக்கு நேற்று மாலை திடீரென மாரைடைப்பு ஏற்பட்டதாக அப்பல்லோ மருத்துவமனையில் இரவில் அறிக்கை வெளியிட்டது. இது தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அப்பலோ மருத்துவமனை முன்பாக அதிமுக தொண்டர்கள் கட்டுக்கடங்காமல் திரண்டனர். தமிழகம் முழுவதும் இருந்தும் அதிமுகவினர் சென்னை நோக்கி புறப்பட்டனர். அப்பலோவில் தமிழக அமைச்சர்கள், அரசு உயர் அதிகாரிகள் முகாமிட்டுள்ளனர்.
இதன்பின்னர் மகாராஷ்டிராவில் இருந்து ஆளுநர் வித்யாசாகர் ராவ் உடனே சென்னை திரும்பி அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்றார். அவர் அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து ராஜ்பவன் திரும்பிய உடனே ஜெயலலிதா உடல்நிலை குறித்து ஆளுநர் அறிக்கை வெளியிடலாம் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் விடிய விடிய எதிர்பார்த்தும் ஆளுநரிடம் இருந்து அறிக்கை வரவில்லை. இதனிடையே லண்டன் மருத்துவர் ஆலோசனையின்படி ஜெயலலிதாவுக்கு நேற்று இரவு ஆஞ்ஜியோ சிகிச்சை அளிக்கப்பட்டது. இதய ரத்தநாளங்களில் உள்ள அடைப்பை சரி செய்ய இந்த ஆஞ்ஜியோ சோதனை மேற்கொள்ளப்பட்டது.
இப்பரிசோதனை முடிவடைந்ததும் ஜெயலலிதா தீவிர அவசர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார். தற்போது முதல்வர் ஜெயலலிதா மருத்துவர்களின் தொடர் தீவிர கண்காணிப்பில் இருந்து வருகிறார்.