தூங்கும் போது பக்கத்து வீட்டை எட்டி பார்த்த வாலிபர்... 3 பேருக்கு சரமாரி கத்திக் குத்து!
நெல்லை: இரவு நேரத்தில் பக்கத்து வீட்டை எட்டி பார்த்ததால் ஏற்பட்ட தகராறில் 3 பேருக்கு சராமரியாக கத்தி குத்து விழுந்துள்ளது. இது தொடர்பாக 2 இளைஞர்களைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
நெல்லை அருகே அம்பை வாகைக்குளம் பச்சைமால் அம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர் சேதுபாண்டியன். இவரது மனைவி சோமசுந்தரி. சம்பவத்தன்று இரவு வேலை நிமித்தமாக வெளியில் சென்று விட்டார் சேதுபாண்டியன். இதனால், சோமசுந்தரிக்குத் துணையாக அவரது தங்கை தேவி அங்கு சென்றிருந்தார்.
நள்ளிரவில் வீட்டின் கிராதி சன்னலில் போட்டிருந்த திரை துணையை யாரோ விளக்கி பார்த்துள்ளனர். அப்போது அங்கு வைக்கப்பட்டிருந்த டப்பா திடீரென கீழே விழுந்தது. இதனால், ஏற்பட்ட்ட சத்தத்தைக் கேட்டு சோமசுந்தரியும், தேவியும் பதறி எழுந்தனர்.
அப்போது வெளியே மாடியில் ஓருவர் தாவி குதித்து ஓடுவதை அவர்கள் பார்த்துள்ளனர். அந்த நபர் அதே கம்பவுண்டில் வசிக்கும் வேலு மகன் கணேசன் என அடையாளம் தெரிய வந்தது. இதையடுத்து சகோதரிகளின் அலறல் சத்தத்தைத் தொடர்ந்து, அக்கம்பக்கத்தார் சேர்ந்து மாடியில் படுத்திருந்த கணேசனை பிடித்து விசாரித்தனர்.
ஆனால், கணேசனோ, ‘தான் ஜன்னல் வழியாக எட்டிப் பார்க்கவில்லை' என பிடிவாதமாக மறுத்தார். இந்த சம்பவம் குறித்து வேலைக்கு சென்றிருந்த சேதுபாணடியனுக்கு தகவல் தெரிவிக்கவே அவர் அங்கு விரைந்து வந்தார். எல்லோரும் சேர்ந்து கணேசனை விசாரிக்கவே அங்கு கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த கணேசன் வீட்டின் உள்ளே சென்று கத்தியை எடுத்து வந்து சேதுபாண்டியன், அவரது மனைவி மற்றும் மனைவியின் தங்கையை சரமாரியாக கத்தியால் குத்தினார். இதில் காயம் அடைந்த மூன்று பேரும் அம்பை மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டனர்.
இது குறித்து தேவி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி கணேசன் மற்றும் அவரது சகோதரர் சங்கரலிங்கம் ஆகியோரை கைது செய்தனர்.
இந்த சம்பவத்தால் அங்கு சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.