முன்னாள் மாணவருக்கு அஞ்சலி செலுத்தும் அண்ணா பல்கலை- 4 கேம்பஸ்களுக்கு விடுமுறை; கவுன்சிலிங் மட்டுமே!
சென்னை: முன்னாள் குடியரசுத் தலைவரான அப்துல் கலாமின் மறைவையொட்டி அண்ணா பல்கலைக்கழகத்தின் 4 கேம்பஸ்களுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கிண்டி, குரோம்பேட்டை எம்.ஐ.டி, எஸ்.எ.பி மற்றும் ஏ.சி.டி ஆகிய 4 கேம்பஸ்களுக்கு இன்று விடுமுறை அளிக்கப்படுவதாகவும், எஞ்சினியரிங் கவுன்சிலிங் இன்று வழக்கம் போல் தொடர்ந்து நடைபெறும் எனவும் அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
இந்தியாவின் 11 வது குடியரசுத் தலைவரான அப்துல் கலாம் அவர்கள் நேற்று மேகாலயா ஐ.ஐ.எம்மில் மாணவர்களுக்கிடையே உரையாற்றிக் கொண்டிருந்த போது மயங்கி விழுந்தார். உடனடியாக ஷில்லாங்கின் பெதானி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்நிலையில் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் சென்னை குரோம்பேட்டையில் உள்ள எம்.ஐ.டி. கல்லூரியில் படித்தார். இதன் காரணமாக அவர் அண்ணா பல்கலைக்கழக முன்னாள் மாணவராக இருந்தார்.
அண்ணா பல்கலைக்கழகத்தில் கவுரவ பேராசிரியராகவும் பணியாற்றினார். அவர் முன்னாள் மாணவர் என்பதன் காரணமாக சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள கிண்டி எஞ்சினியரிங் கல்லூரி, அழகப்பா தொழில்நுட்ப கல்லூரி, கட்டிடக்கலை கல்லூரி மற்றும் குரோம்பேட்டையில் உள்ள எம்.ஐ.டி. கல்லூரி ஆகிய 4 கல்லூரிகளிலும் இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.
மாணவர்கள் மட்டும் வகுப்புக்கு வரமாட்டார்கள். நிர்வாக ரீதியில் உள்ளவர்களுக்கு விடுமுறை கிடையாது. வழக்கம்போல் பொறியியல் கலந்தாய்வு இன்று நடைபெறும் என்று அண்ணா பல்கலைக்கழக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.