இன்று முதல் பொறியியல் முதல் வருட வகுப்புகள் தொடக்கம்: அண்ணா பல்கலை
சென்னை: தமிழ்நாட்டில் இன்று முதல் என்ஜீனியரிங் முதல் வருட படிப்புகள் துவங்குகின்றன என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் 538 என்ஜீனியரிங் கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் பி.இ, பி.டெக், பி.ஆர்க் ஆகிய படிப்புகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் மாணவர்களை சேர்க்க அண்ணா பல்கலைக்கழகம் கலந்தாய்வை நடத்தியது. மாணவர் சேர்க்கை செயலாளர் பேராசிரியர் வி.ரைமண்ட் உத்தரியராஜ் மேற்பார்வையில் கலந்தாய்வு நடந்தது. கலந்தாய்வு நேற்றுடன் முடிவடைந்தது. மொத்தம் 1 லட்சத்து 7 ஆயிரத்து 968 மாணவ, மாணவிகள் சேர்ந்துள்ளனர்.
இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் மு.ராஜாராம், பதிவாளர் பேராசிரியர் எஸ்.கணேசன் ஆகியோர், "தமிழ்நாடு முழுக்க உள்ள என்ஜீனியரிங் கல்லூரிகளில் மாணவர்களை சேர்க்க அண்ணா பல்கலைக்கழகம் கடந்த மாதம் முழுவதும் கலந்தாய்வை நடத்தியது. ஒட்டு மொத்த கலந்தாய்வும் நேற்றுடன் முடிவடைந்தது.
இதைத்தொடர்ந்து அண்ணா பல்கலைக்கழக 4 கல்லூரிகள், அரசு கல்லூரிகள், அரசு உதவி பெறும் கல்லூரிகள், சுயநிதி கல்லூரிகள் உள்பட தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து பொறியியல் கல்லூரிகளிலும் பி.இ, பி.டெக், பி.ஆர்க். ஆகிய படிப்புகளின் முதலாம் ஆண்டு வகுப்புகள் இன்று தொடங்குகின்றன.
துநிலை படிப்பில் (எம்.இ., எம்.டெக்., எம்.ஆர்க்., எம்.பிளான்) சேர்வதற்கான கலந்தாய்வு இன்று அண்ணாபல்கலைக்கழகத்தில் தொடங்குகிறது. "கேட்" தேர்வில் எடுத்த மதிப்பெண் அடிப்படையில் மாற்றுத்திறனாளிகளும், பின்னர் கேட் தேர்வில் எடுத்த மதிப்பெண் அடிப்படையில் பொதுப் பிரிவு மாணவ, மாணவிகளும் கலந்துகொள்கிறார்கள்.
4 ஆம் தேதி "டான்செட்" தேர்வு எழுதி அதில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் மாணவ, மாணவிகள் கலந்தாய்வில் பங்கேற்கிறார்கள். 7 ஆம் தேதி வரை கலந்தாய்வு நடக்கிறது. எம்.இ, எம்.டெக், எம்.ஆர்க், எம்.பிளான். முதல் ஆண்டு வகுப்புகள் 17 ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் தொடங்குகின்றன" என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.