நின்றுகொண்டிருந்த லாரி மீது மோதியதில் அரசு பஸ்சின் ஒருபக்கமே காலி.. 2 பேர் பரிதாப சாவு
திருச்சி அருகே நின்றிருந்த லாரி மீது அரசுப் பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
திருச்சி : தொழுதூர் நோக்கி வந்து கொண்டிருந்த அரசுப் பேருந்து அதிகாலையில் நின்றிருந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானதில் பேருந்து கண்டம் துண்டமானதோடு சம்பவ இடத்திலேயே 2 பேர் உயிரிழந்தனர்.
திருச்சியில் இருந்து தொழுதூர் நோக்கி இன்று அதிகாலை அரசுப்பேருந்து சென்றுள்ளது. அப்போது எழுத்தூரில் நின்றிருந்த லாரியின் மீது பேருந்து மோதியுள்ளது. அதிகாலையில் பயணிகள் அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்ததால் பலத்த சத்தம் கேட்டு விழித்துள்ளனர்.
இந்த விபத்தில் பேருந்தின் ஒரு பக்கமே பெயர்ந்து போயுள்ளது. அதிகாலையில் நடந்த விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலே உயிரிழந்ததோடு, 30க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் பெரம்பலூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். தஞ்சாவூரில் அரசுப் பேருந்தின் மீது மினி லாரி மோதிய விபத்தில் 10 பேர் உயிரிழந்து 23 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் திருச்சியில் நடைபெற்ற சம்பவம் அரசுப் பேருந்துகளுக்கு இது போதாத காலமா என்ற நினைப்பை ஏற்படுத்தியுள்ளது.