நல்லா குடி… ஊறுகாயை தொட்டுக்க… மீண்டும் ஒரு சிறுவனை மது குடிக்க வைத்த கொடூரர்கள்
மதுரை: திருவண்ணாமலை அருகே சிறுவனை மதுகுடிக்க வைத்த சம்பவத்தின் அதிர்ச்சி அலைகள் இன்னும் விலகாத நிலையில் தமிழகத்தில் மீண்டும் ஒரு சிறுவனை மது குடிக்க வைத்துள்ள சம்பவம் திடுக்கிட வைத்துள்ளது. வாட்ஸ் அப்பில் வலம் வரும் அந்த வீடியோ காண்பவர் நெஞ்சை பதை பதைக்க வைக்கிறது.
மக்கள் நடமாட்டம் இல்லாத இடம் ஒன்றில் வாலிபர்கள் சிலர் மது அருந்திக்கொண்டிருக்கின்றனர். அப்போது, மூன்று வயது சிறுவன் அவர்களின் அருகில் அமர்ந்திருக்கிறான். டேய் சரக்கடிக்கிறயா என்று கேட்கிறான் ஒருவன். அவனுக்கு மதுபானத்தை டம்ளரில் ஊற்றுகின்றனர்.
பின்னர், ‘தண்ணிதான் குடிங்க பிரண்ட், குடிங்க பிரண்ட்‘ என்று உசுப்பேற்றுகின்றனர். அதை கேட்டு சிறுவன் செய்வதறியாது மழலை குரலில் அவர்களிடம் பேசுகிறான். தொடர்ந்து மதுபானம் இருக்கும் டம்ளரை சிறுவனிடம் வாலிபர் ஒருவர் நீட்டுகிறார். அப்போது அருகில் இருக்கும் நபர், அப்பனே பையனை குடிகாரனா மாத்துறானே என்று கேட்கிறான். அந்த சிறுவன் டம்ளரை வாங்கி முகர்ந்து பார்க்கிறான்.
அதற்கு ஒருவன், "மாப்ள கண்ணை மூடி கப்புன்னு ஒரு இழுப்பு இழு' என்று சிறுவனிடம் யோசனை கூறுகிறார். வேறுவழியின்றி சிறுவன் அப்படியே செய்கிறான். அதை சில வாலிபர்கள் வேடிக்கை பார்க்கின்றனர். ஒருவனோ அப்பனை மாதிரியே குடிக்கிறானே என்று கூறி சிரிக்கின்றனர். ‘டானிக் குடிக்கிற மாதிரி குடிக்கிறான் பாரு.. இவன் அப்பன் பெரிய குடிகாரன். அவனை மாதிரியே குடிக்கிறான் பார்' என்று சுற்றி நிற்கும் வாலிபர்கள் கிண்டல் செய்கின்றனர்.
ஒரு ஊறுகாய் மட்டையை சிறுவனிடம் கொடுத்து... " இந்தா ஊறுகாயை நக்கு... என்று சொல்கிறான் ஒருவன்... சிறுவனும் அவர்கள் சொல்வதை செய்கிறான். ‘அடுத்த ரவுண்டு அடி... அடி..' என்று பின்னால் இருந்து கூட்டாக குரல் எழுப்புகின்றனர்.
சிறுவனை பார்த்து, ‘சரக்கு இன்னும் வேணுமா' என்று ஒரு வாலிபர் கேட்கிறார். சிறுவனும் மெல்லிய போதையில் வேண்டும் என்பதுபோல் தலையசைக்கிறான். இந்த காட்சிகள் 2 நிமிடம் 15 விநாடி ஓடுகிறது. பார்ப்பவர்களை பதை பதைக்கச் செய்கிறது இந்த வீடியோ காட்சிகள்.
வீடியோவில் பேசும் நபர்கள் அனைவரும் மதுரை தமிழில் பேசுகின்றனர். ‘டேய் சும்மா இருங்கடா கொன்டே புடுவேன்' என்று கூறுகிறான் ஒரு குடிகாரன்.
கடந்த ஜூன் 23ம் தேதி திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்துள்ள கடலாடி கிராமத்தில் 4 வயது சிறுவனுக்கு வாலிபர்கள் சிலர் மது ஊற்றிக் கொடுத்த வீடியோ காட்சி வாட்ஸ்அப் மூலம் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தமிழகத்தையே உலுக்கிய இந்த சம்பவம் தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பலரை போலீசார் தேடி வருகின்றனர். இந்நிலையில், மேலும் ஒரு சிறுவனுக்கு வாலிபர்கள் சிலர் மது ஊற்றி கொடுக்கும் வீடியோ காட்சி வாட்ஸ்அப்பில் வெளியாகி உள்ளது.
கலசப்பாக்கத்தில் குழந்தைக்கு மது கொடுத்தவர்கள் மீது 147 (சட்டவிரோதமாக கூடுதல்), 363 (கடத்தி செல்லுதல்), 307 (கொடூர மரணம் ஏற்படும் என்று தெரிந்தும் அதில் ஈடுபடுதல்), 34(கொடூர செயலுக்கு குழுவாக இருந்து உடந்தையாக செயல்படுதல்), ஆர்.டபிள்யூ 25 ஜே ஜே (சிறுவர்களுக்கு வெளியூட்டும் போதை பொருட்களை கொடுத்தல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சட்டபிரிவுகளுக்கு 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும். இதே பிரிவின் கீழ் மதுரை சம்பவத்தில் ஈடுபட்டவர்களையும் கைது செய்ய வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழக அரசு, சுமார் 6,823 டாஸ்மாக் கடைகள் மூலம் மதுவிற்பனையை செய்து வருகிறது. தற்போது சில கொடூரமானவர்களின் செயல்பாடுகளால், இளைஞர்கள் மட்டுமல்லாது குழந்தைகளும் மதுப் பழக்கத்துக்கு திட்டமிட்டும், தங்கள் மகிழ்ச்சிக்காகவும் அடிமையாக்கி வருவது வாட்ஸ்அப்பில் பரவி வரும் காட்சிகள் மூலம் தெரியவந்துள்ளது. எனவே தமிழகம் முழுவதும் மதுக்கடைகளை மூடவேண்டும் என்றும் கோரிக்கை வலுவடைந்துள்ளது.