சென்னையில் மீண்டும் பரிதாபம்.. தேங்கிய மழை நீரி்ல் மின்சாரம் பாய்ந்து பெண் பலி
சென்னை: சென்னை வேளச்சேரியில் மழை நீரில் மின்சாரம் பாய்ந்து ஒரு தம்பதி பலியான சோகமே இன்னும் மறையாத நிலையில் இன்னொரு உயிர் பறிபோயுள்ளது.
சென்னை ஷெனாய் நகரைச் சேர்ந்தவர் செண்பகா தேவி. இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு கணவர் திரவியம், மகன் உள்ளனர்.
நேற்று இரவு பணி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தார் செண்பகா தேவி. அப்போது பாரதிபுரம் பிரதான சாலையில் தேங்கிக் கிடந்த மழை நீரி்ல் நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது அங்கு மின்சார வயர் அறுந்து கிடந்துள்ளது. அதைக் கவனிக்காமல் மிதித்துள்ளார் செண்பகா தேவி. இதில் அவர் பரிதாபமாக அங்கேயே உயிரிழந்தார்.
இந்த சம்பவம் ஷெனாய் நகர் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேங்கிக் கிடக்கும் தண்ணீரில் மின்சாரம் பாயும் அபாயம் இருப்பதால் மின்சார வயர்களை மின்வாரியத்தினர் தொடர்ந்து கண்காணித்து வர வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.