சசிகலா மேலும் ஓராண்டு சிறை தண்டனை அனுபவிக்க வாய்ப்பு.. ஏன் தெரியுமா?
சொத்துக் குவிப்பு வழக்கில் அபராதம் விதிக்கப்பட்ட சசிகலா அதை செலுத்தத் தவறினால் மேலும் ஓராண்டு சிறையில் இருக்க வேண்டியிருக்கும் என்று தீர்ப்பு நகல் தெரிவிக்கிறது.
சென்னை: வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவித்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சசிகலா நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட அபராதத்தை செலுத்தவில்லை என்றால் அவர் கூடுதலாக சிறையில் இருக்க வேண்டியிருக்கும் என்பது தீர்ப்பின் சாரமாகும்.
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு தலா 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஜெயலலிதாவுக்கு ரூ.100 கோடி அபராதம் விதித்து பெங்களூர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா தீர்ப்பு வழங்கினார்.
குற்றத்திற்கு உடந்தையாக இருந்த, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு தலா 4 ஆண்டு ஜெயில் தண்டனையும், தலா ரூ.10 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது.
ஓராண்டு சிறை
அபாரதத்தை செலுத்த தவறினால், மேலும் ஓராண்டு ஜெயில் தண்டனை அனுபவிக்க வேண்டும். மற்றொரு பிரிவின்கீழ், குற்றச்சதியில் ஈடுபட்டதற்காக, 3 பேருக்கும் தலா 6 மாதம் சாதாரண ஜெயில் தண்டனையும், தலா ரூ.10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படுகிறது. அபராதம் செலுத்த தவறினால், மேலும் ஒரு மாதம் ஜெயில் தண்டனை அனுபவிக்க வேண்டும்.
அபாரதம் செலுத்தவில்லை
பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த இந்த உத்தரவை சமீபத்தில் சுப்ரீம் கோர்ட் வழங்கிய தீர்ப்பு உறுதி செய்துவிட்டது. ஜெயலலிதா மரணமடைந்துவிட்டதால் அவரது சொத்துகளை விற்று அபராதத் தொகையை செலுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் சசிகலா உள்பட மூவருக்கு விதிக்கப்பட்ட அபராதத்தை இதுவரை செலுத்தவில்லை என்று தெரிகிறது.
சிறை
இந்நிலையில், சசிகலா தனக்கு விதிக்கப்பட்ட ரூ.10 கோடி அபராதத்தை செலுத்தத் தவறினால் அவர் கூடுதலாக ஓராண்டு சிறை தண்டனையை அனுபவிக்க வேண்டியிருக்கும்.
மற்றொரு பிரிவிலும் சிறை
குற்றச்சதி பிரிவுக்காக விதிக்கப்பட்ட ரூ.10,000 அபராதத்தை செலுத்தவில்லை மேலும் ஒரு மாதம் கூடுதலாக சிறையில் இருக்க வேண்டிவரும் என்பதே உச்சநீதிமன்ற தீர்ப்பு சாராம்சம். சசிகலா இன்னும் அபராதத்தை செலுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.