தமிழக ஆளுநர் யார்? விவகாரத்தில் மல்லுக்கட்டும் ஆந்திரா, கர்நாடகா பத்திரிகைகள்
சென்னை: தமிழக ஆளுநர் யார் என்பதில் ஆந்திரா மற்றும் கர்நாடகா நாளிதழ்கள் தொடர்ந்து மல்லுக் கட்டி வருகின்றன.
தமிழக ஆளுநராக இருக்கும் ஆந்திராவைச் சேர்ந்த ரோசய்யாவின் பதவி காலம் வரும் 31-ந் தேதியுடன் முடிவடைகிறது. இதனால் புதிய ஆளுநர் யார் என்ற விவாதம் எழுந்தது.
மத்திய அமைச்சரவையில் இருந்து விலகிய நஜ்மா ஹெப்துல்லா, குஜராத் முதல்வர் பதவியில் இருந்து விலகிய ஆனந்தி பென் ஆகியோரது பெயர்கள் அடிபட்டன. நிச்சயம் இவர்களில் ஒருவர்தான் புதிய ஆளுநர் என்றெல்லாம் ஆரூடம் கூறப்பட்டது.
சங்கரமூர்த்தி
இந்த நிலையில் கர்நாடகாவைச் சேர்ந்த டெக்கான் ஹெரால்டு பத்திரிகை, அம்மாநில மூத்த பாஜக தலைவரும் சட்டமேலவை தலைவருமான சங்கரமூர்த்திதான் புதிய ஆளுநராகக் கூடும் என செய்தி வெளியிட பரபரப்பு ஏற்பட்டது. கர்நாடகாவுக்கும் தமிழகத்துக்கும் காவிரி பிரச்சனை இருந்து வருகிறது. இந்த நிலையில் கர்நாடகாவைச் சேர்ந்த ஒருவரை தமிழகத்துக்கு ஆளுநராக மத்திய அரசு நியமிக்குமா? நியமிப்பதா? என்ற விவாதங்களும் நடந்தன.
ஜெ. எதிர்ப்பு
இதனிடையே திடீரென சங்கரமூர்த்திக்கு முதல்வர் ஜெயலலிதா எதிர்ப்பு தெரிவித்துள்ளதாகவும் ஆனந்தி பென்னுக்கும் ஆதரவு தெரிவித்து உள்துறை அமைச்சகத்துக்கு கடிதம் அனுப்பியதாக தொலைக்காட்சிகளில் செய்திகள் வெளியாகின. இதனால் ஆளுநர் நியமன விவகாரம் பெரும் பரபரப்பானது.
ரோசய்யாவுக்கு நீடிப்பு
தற்போது ஆந்திராவைச் சேர்ந்த டெக்கான் க்ரானிக்கல் பத்திரிகையோ, ஆந்திராவைச் சேர்ந்தவரான ரோசய்யாதான் அடுத்த 5 ஆண்டுகளுக்கும் தமிழக ஆளுநராகவே நீடிப்பார்; இது தொடர்பாக ஏற்கனவே மோடியிடம் ஜெயலலிதா பேசி முடித்துவிட்டார் என செய்திகள் வெளியிட்டு வருகிறது. அத்துடன் காவிரி பிரச்சனை இருக்கும் போது கர்நாடகாவைச் சேர்ந்தவரை தமிழக ஆளுநராக நியமித்தால் மிகப் பெரும் அரசியல் பிழையை பாஜக செய்ததாகிவிடும் என்றெல்லாம் சுட்டிக்காட்டியுள்ளது.
தெலுங்கானாவுக்கு சங்கரமூர்த்தி
மேலும் தெலுங்கானாவின் புதிய ஆளுநராகத்தான் கர்நாடகாவைச் சேர்ந்த சங்கரமூர்த்தி நியமிக்கப்பட இருக்கிறார் என்றும் டெக்கான் க்ரானிக்கல் விவரித்துள்ளது. இப்படி தமிழக ஆளுநர் யார் என்பது தொடர்பாக கர்நாடகா, ஆந்திரா நாளிதழ்கள் தொடர்ந்து மல்லுக்கட்டிக் கொண்டே வருகின்றன.