செம்மரக் கடத்தலில் சிக்கும் நடிகர்.. தமிழ் நடிகரா, தெலுங்கு நடிகரா?... பரபர தகவல்கள்!
சென்னை: செம்மரக் கடத்தல் விவகாரத்தில் ஒரு நடிகர் சிக்கியிருப்பதாக பரபரப்புத் தகவல்கள் கிளம்பியுள்ளன. அவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த நடிகரா அல்லது ஆந்திராவைச் சேர்ந்த தெலுங்கு நடிகரா என்று தெரியவில்லை. நடிகர் ஒருவரைப் போலீஸார் பிடித்து விசாரித்து வருவதாகவும் தகவல்கள் கூறுகின்றன. ஆனால் இதுகுறித்து ஆந்திரப் போலீஸ் தரப்பில் எந்த தகவலும் இல்லை.
செம்மரக் கடத்தல் விவகாரம் தற்போது சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது. 20 தமிழர்களைக் கொன்று குவித்த கையோடு தற்போது பெரும் புள்ளிகள் பக்கம் பார்வையைத் திருப்பியுள்ளது ஆந்திர அரசு.முன்னாள் ஆந்திர மற்றும் தமிழக அமைச்சர்கள் சிலர் இதில் சிக்கவுள்ளதாக பரபரப்பு எழுந்துள்ளது. மொத்தம் 3 முன்னாள் அமைச்சர்கள் வலையில் சிக்குகின்றனராம். அவர்களில் எத்தனை பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள், எத்தனை பேர் ஆந்திராவைச் சேர்ந்தவர்கள் என்று தெரியவில்லை.
ஆந்திர மாநில ஐ.ஜி.கோபாலகிருஷ்ணா மேற்பார்வையில், சித்தூர் மாவட்ட போலீஸ் எஸ்.பி சீனிவாஸ் தலைமையில் 80 பேர் கொண்ட 2 தனிப்படைகள் விசாரணையில் ஈடுபட்டனர். இதில் செம்மர கடத்தலில் ஈடுபடும் ஏஜெண்டுகள் 16 பேர் சிக்கினார்கள். இதில் ஒருவரிடம் விசாரணை நடத்தியபோது சென்னையை சேர்ந்த சவுந்தர்ராஜன் என்பவர் மூலம் செம்மர கட்டைகளை விற்றுவருவதாக தெரிவித்தார். சவுந்தர்ராஜன், மேற்குவங்காள மாநிலம் வழியாக சீனாவுக்கு செம்மர கட்டைகளை கடத்தி விற்று வருவது தெரியவந்தது.
அவர் பல டன் மதிப்புள்ள செம்மர கட்டைகளை சீனாவுக்கு கடத்துவதற்காக மேற்கு வங்காள மாநிலத்துக்கு கொண்டு சென்று இருப்பதாகவும் தகவல் கிடைத்தது. இதனையடுத்து டிஎஸ்பி கிரிதர்ராவ் உள்பட 10 பேர் கொண்ட குழுவினர் மேற்கு வங்காளத்துக்கு சென்றனர். அவர்கள் மேற்கு வங்காளத்தில் விசாரித்தபோது, பூடானுக்கு 2 கிலோ மீட்டர் தொலைவில் அடர்ந்த வனப்பகுதிக்குள் அவர் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து பூடான் போலீஸ் துணையுடன் அடர்ந்த வனப்பகுதிக்குள் போலீசார் தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது யானைகள் துரத்தியதால் தப்பி வந்த சவுந்தர்ராஜனை போலீசார் பிடித்தனர்.
அவரை கைது செய்த அதிரடிப்படை போலீசார், அங்கு சீனாவுக்கு கடத்த முயன்ற 149 செம்மர கட்டைகளை பறிமுதல் செய்தனர். இவற்றின் மதிப்பு ரூ.30 லட்சம் ஆகும். சவுந்தர்ராஜனின் குடும்பம் தற்போது மியான்மர் நாட்டில் இருப்பதாக சொல்லப்படுகிறது.
சவுந்தர்ராஜனை போலீசார் சித்தூருக்கு அழைத்து வந்து தீவிர விசாரணை நடத்தினர். அப்போது சென்னை ஆவடி சிப்காட் பகுதியில் உள்ள குடோனில் சரவணன் என்பவரது கட்டுப்பாட்டில் செம்மர கட்டைகளை பதுக்கியிருப்பதாக கூறினார். இதனையடுத்து அதிரடிப்படை போலீசார் 30 பேர் சென்னை ஆவடி சிப்காட்டிற்கு விரைந்தனர். அங்குள்ள குடோனில் 167 செம்மர கட்டைகள் இருந்தன. அவற்றை பறிமுதல் செய்த போலீசார், சவுந்தர்ராஜனின் கூட்டாளி சரவணனை கைது செய்தனர். சரவணனிடம் கைப்பற்றப்பட்ட செம்மர கட்டைகளின் மதிப்பு சுமார் ரூ.57 லட்சம் இருக்கும் என போலீசார் தெரிவித்தனர்.
இந்த நிலையில்தான் ஒரு நடிகரைப் பிடித்து ஆந்திர போலீஸார் விசாரித்து வருவதாக தகவல் வெளியாகி பரபரப்பைக் கிளப்பியது. இவர் யார், தமிழ் நடிகரா அல்லது தெலுங்கு நடிகரா என்பது தெரியவில்லை. ஆந்திரப் போலீஸ் தரப்பிலும் இதுகுறித்து எந்தத் தகவலும் இல்லை. இதனால் குழப்பம் அதிகரித்துள்ளது.