எம்ஜிஆர், கருணாநிதி, ஜெயலலிதா.. அரசியல்வாதிகளின் ஆரோக்கியத்திற்கு அப்போலோ கேரண்டி
சென்னை: தமிழக அரசியல்வாதிகளுக்கு ஆரோக்கிய குறைபாடுகள் வந்தபோதெல்லாம் அவர்கள் நாடுவது அப்போலோ மருத்துவமனையைதான். இது எம்ஜிஆர் காலம் தொடங்கி, இப்போது ஜெயலலிதா காலம் வரை தொடர் கதையாகியுள்ளது.
அனைத்து வசதி கொண்ட மல்ட்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையை தமிழக அரசு தொடங்கியதாக அறிவித்த நிலையிலும், எதற்காக, ஜெயலலிதா அப்பல்லோவில் சிகிச்சை பெறுகிறார் என்ற விமர்சனங்கள் ஒருபக்கம், கலைஞர் காப்பீடு திட்டம் கொண்டுவந்த கருணாநிதியும் அப்பல்லோவில்தானே சிகிச்சை பெற்றார் என்ற பதிலடிகள் மறுபக்கம் என சோஷியல் மீடியா நெருப்பாய் தகன்று கொண்டுள்ளது.
ஆனால் அப்பல்லோ மருத்துவமனை, இன்று நேற்றல்ல, பன்னெடுங்காலமாக தமிழக அரசியல்வாதிகளின் ஆரோக்கியத்தை தீர்மானிக்கும் சக்தியாக செயல்பட்டுக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
முதலில் எம்ஜிஆர்
1983 அக்டோபரில் சென்னையில் தொடங்கப்பட்டது அப்போலோ மருத்துவமனை. அடுத்த ஆண்டு அக்டோபர் 5ம் தேதி, அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர் உடல் நலக்குறைவால் அம்மருத்துவனையில் அட்மிட் செய்யப்பட்டார். இப்போது போலவே அப்போதும், அப்பல்லோ நிர்வாகம் அவ்வப்போது எம்.ஜி.ஆர் உடல் நலம் குறித்த தகவல்களை வெளியிட்டபடி இருந்தது. சளித்தொல்லை, ஆஸ்துமா பிரச்சினை இருப்பதாக சரியான தகவல்களை வெளியிட்டபடி இருந்தது.
அரசே அறிக்கை
இந்த தகவல்களை செய்தித்தாள்கள் மூலம் அறிந்து கொண்ட, தொண்டர்களும், எம்.ஜி.ஆர் விசுவாசிகளும் மருத்துவமனை வளாகத்தில் குவிந்தனர். இதனால் தமிழக அரசாங்கம் சார்பில் அறிக்கை வெளியிடப்பட ஆரம்பிக்கப்பட்டது. "முதலமைச்சரின் உடல்நலம் தொடர்ந்து முன்னேறி வருகிறது" என்பது மட்டுமே அந்த அறிக்கையில் இடம் பெற்றிருந்தது.
அப்போலோ தகவல்
ஆனால், அக்டோபர் 14ம் தேதி, அப்போலோ மருத்துவமனை சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், "எம்.ஜி.ஆரின் மூளையில், ஒரு இடத்தில் ரத்தம் உறைந்துள்ளது" என்று அறிவித்தது. தகவலறிந்த பிரதமர் இந்திரா காந்தி, அக்டோபர் 16ம் தேதி எம்.ஜி.ஆரைப் பார்க்க சென்னை வந்தார். பிரதமர் ஆலோசனைப்படி எம்.ஜி.ஆர் அப்போலோவில் இருந்து அமெரிக்காவுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
ரங்கராஜன் குடும்பம் விமர்சனம்
காங்கிரஸ் கட்சியிலும் பிறகு பாரதிய ஜனதாவிலும் இருந்தவர் ரங்கராஜன் குமாரமங்கலம். காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்து, நரசிம்மராவ் பிரதமராக இருந்தபோது, ரங்கராஜன் குமாரமங்கலம் சட்டத்துறை அமைச்சராக இருந்தார். அதன்பிறகு, பாரதிய ஜனதா ஆட்சி அமைத்து, வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது, மத்திய மின்துறை அமைச்சராக இருந்தார். இவர், கடந்த 2000-வது ஆண்டில், சாதரண காய்ச்சல் என்று அப்போலோவில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். அதன்பிறகு, காய்ச்சல் குணமடைந்து டெல்லி சென்றவர், கோமா நிலைக்குப் போனார். அவருடைய உடலில் பல உறுப்புகள் செயலிழந்தன. இதையடுத்து, அவரை எய்ம்ஸ் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். இந்த நிலையில், அப்போலோ மருத்துவமனை மீது ரங்கராஜன் குமாரமங்கலம் குடும்பத்தினர் ஒரு விமர்சனத்தை வைத்தனர்.
முரசொலி மாறன்
முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறன், கடந்த 2002ம் ஆண்டு, இறுதியில் அப்போலோ மருத்துவமனையில் உடல்நலக் குறைவுக்கு சிகிச்சை பெற்றார். குணமடைந்து, டெல்லி சென்ற அவருக்கு, அடுத்த ஆண்டு மீண்டும் உடல்நலம் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. உடனே, டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். முரசொலிமாறனின் உடல்நிலை குறித்து பேசிய தி.மு.க தலைவர் கருணாநிதி, அப்போல்லோ மருத்துவமனை மீது ஒரு விமர்சனம் வைத்தார். இந்நிலையில் முரசொலிமாறன், டெல்லியில் இருந்து, 2003 நவம்பர் 14-ம் தேதி அமெரிக்காவின் டெக்சாஸ் மகாணத்தில், ஹூஸ்டன் நகரில் இருக்கும் மெத்தோடிஸ்ட் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். 10 மாதங்கள் அங்கு தங்கியிருந்து சிகிச்சை கொடுத்தும், உடல்நிலை சரியாகவில்லை.
மீண்டும் சிகிச்சை
அதன்பிறகு, இந்தியா அழைத்து வரப்பட்ட அவர் மீண்டும் அப்போல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். கோமாவில் இருந்த மாறனை பிரதமர் வாஜ்பாய் 2003 செப்டம்பர் 13ம் தேதி வந்து பார்த்தார். மத்திய அமைச்சர்கள் அப்போலோவுக்கு வந்தனர். கருணாநிதி தினமும் அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்து முரசொலிமாறனைப் பார்த்துவிட்டுத்தான் அடுத்த வேலையைத் தொடங்குவார். அந்த ஆண்டு நவம்பர் 23ம் தேதியன்று மாறன் சிகிச்சை பலனளிக்காமல் இறந்தார்.
கருணாநிதியும் சிகிச்சை
கருணாநிதி முதல்வராக இருந்த போது அவருக்கு அடிக்கடி முதுகுவலி உள்ளிட்ட பிரச்னைகள் இருந்து வந்தன. 2011ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டதால் மே 3ம் தேதி திடீரென மீண்டும் அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அதனால் அப்போலோ மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதை அடுத்து சில நாட்களில் வீடு திரும்பினார்.
இப்போது ஜெயலலிதா
கடந்த 2011ம் ஆண்டு நவம்பர் 21ம் தேதி இரவு கருணாநிதிக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. சிறுநீரகத் தொற்று இருப்பதால் சிறுநீர் கழிப்பதில் சிரமம் இருந்தது. இதையடுத்து அவர் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சைக்குப் பின்னர் 22ம் தேதி இரவு வீடு திரும்பினார். இந்நிலையில் மிகவும் அரிதாக ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்.