6 ஆண்டுகால சதியின் விளைவு ஜெ. மரணம்? அம்பலப்படுத்திய 'அப்பல்லோ' ரிப்போர்ட்
அப்பல்லோ மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையானது ஜெயலலிதாவுக்கு கடந்த காலத்தில் மேற்கொள்ளப்பட்ட சிகிச்சைகள் தொடர்பான சந்தேகங்களை கோடிட்டு காட்டியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதா தமக்கு தரப்படும் உணவு விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என இன்றைய பிரதமரும் அன்றைய குஜராத் முதல்வருமான நரேந்திர மோடி 2011-ல் போனில் விடுத்த எச்சரிக்கை உண்மைதான் என்பதை மறைமுகமாக சுட்டிக் காட்டுகிறது அப்பல்லோ அறிக்கை. இது புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் தொடர்பாக அப்பல்லோ மருத்துவமனை மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்களின் அறிக்கைகளை வெளியிட்டு இதன் சாராம்சத்தின் அடிப்படையில் தமிழக அரசும் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. ஆனால் ஒட்டுமொத்தமாக இந்த அறிக்கை வெறும் கண்துடைப்புக்கானதே என நிராகரிக்கப்பட்டு வருகிறது.
[ஜெ. சிகிச்சை: தமிழக அரசு வெளியிட்ட அப்பல்லோ மருத்துமனை. எய்ம்ஸ் மருத்துவர்களின் அறிக்கைகள்]
அத்துடன் அரசியல் சார்ந்த கேள்விகளுக்கு மருத்துவர்கள், அரசு எப்படி பதில் தர முடியும் என்கிற கேள்வியும் முன்வைக்கப்படுகிறது. இதனிடையே அப்பல்லோ மருத்துவமனையின் அறிக்கையில் ஜெயலலிதாவின் உடல்நல பாதிப்புகளுக்கு அவருக்கு அளிக்கப்பட்ட முந்தைய சிகிச்சைகள் ஒரு காரணம் எனவும் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளது.
குஜராத் நர்ஸ்
இது மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2011-ம் ஆண்டு சட்டசபை தேர்தல் முடிவடைந்த நிலையில் குஜராத் முதல்வராக இருந்த நரேந்திர மோடி, ஜெயலலிதா தமது நண்பர் என்பதால் நர்ஸ் ஒருவரை போயஸ் கார்டனுக்கு அனுப்பி வைத்திருந்தார். ஆனால் போயஸ் கார்டனில் இருந்தவர்கள் அந்த நர்ஸை டார்ச்சர் செய்து விரட்டியடித்தனர்.
மோடியின் எச்சரிக்கை
அப்போது ஜெயலலிதாவுக்கு போன் போட்ட நரேந்திர மோடி, உங்களுக்கு தரப்படுகிற மருந்துக்கும் உணவுக்கும் தொடர்பே இல்லை; உணவு விஷயத்தில் கவனமாக இருங்கள் என கடுமையாக எச்சரித்தார். இதனைத் தொடர்ந்து போயஸ் கார்டனில் விசாரணை நடத்தினார் ஜெயலலிதா.
ஜெ.வின் சதி அறிக்கை
இந்த விசாரணையின் முடிவில்தான் சசிகலா உள்ளிட்ட ஒட்டுமொத்த அவரது கோஷ்டியையும் கூண்டோடு போயஸ் கார்டனை விட்டு துரத்திவிட்டார் ஜெயலலிதா. அப்போது ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கையில், தமக்கு எதிராக சதி நடந்ததாகவும் குற்றச்சாட்டியிருந்தார்.
ஜெ. உடல்நலம் பாதிப்பு
இதன்பின்னர் சசிகலா மட்டுமே சில மாதங்கள் கழித்து போயஸ் கார்டனில் சேர்க்கப்பட்டார். பின்னர் ஜெயலலிதாவின் உடல்நலம் படிப்படியாக குன்றி சசிகலாவை மட்டுமே சார்ந்திருக்கும் நிலைக்கு அவர் தள்ளப்பட்டார்.
உண்மையை உடைத்த அறிக்கை
இந்த நிலையில்தான் செப்டம்பர் 22-ந் தேதி நீர்ச்சத்து குறைபாடு, காய்ச்சல் காரணங்களுக்காக மருத்துவமனையில் ஜெயலலிதா சேர்க்கப்பட்டார் என சொல்லப்பட்டது. ஆனால் அப்பல்லோ அறிக்கையோ, போயஸ் கார்டனில் மயங்கிய நிலையில் ஜெயலலிதா இருந்தார். அந்த நிலையில்தான் மருத்துவமனையில் சேர்த்தோம் என உண்மையை போட்டுடைத்தது.
விடை தெரியாத கேள்விகள்
அப்படியானால் ஜெயலலிதா மயக்கமடைந்தது எப்போது? முதல்வர் என்கிற அடிப்படையில் ஜெயலலிதா வீட்டில் நிறுத்தப்பட்ட ஆம்புலன்ஸ் எங்கே? ஏன் அப்பல்லோவுக்கு போனடித்தார்கள்? என விடை தெரியாத கேள்விகள் இருக்கின்றன. தற்போதைய அப்பல்லோவின் அறிக்கையானது 2011-ல் மோடியின் எச்சரிக்கையையும் ஜெயலலிதாவின் சதி அறிக்கையையும் திட்டவட்டமாக உறுதிப்படுத்துகிறது என்பது மறுக்க முடியாது.