கல்விக் கட்டணக் கொள்ளையை தடுக்க, கட்டண நிர்ணய குழு தலைவரை நியமிக்க ராமதாஸ் கோரிக்கை
சென்னை: கல்விக் கட்டணக் கொள்ளையை தடுக்க தனியார் பள்ளிகளுக்கான கட்டண நிர்ணய குழு தலைவரை உடனடியாக நியமிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாட்டில் அதிமுக்கியத்துவமும், அவசரமும் நிறைந்த விஷயங்களில் அ.தி.மு.க. அரசு எவ்வளவு அலட்சியமாகவும், பொறுப்பின்றியும் செயல்படுகிறது என்பதற்கு தனியார் பள்ளிகளின் கட்டண நிர்ணய குழு தலைவரை நியமிப்பதில் செய்யப்படும் தாமதம் தான் சிறந்த உதாரணமாகும். இக்குழுவின் தலைவர் நீதிபதி சிங்காரவேலு ஓய்வு பெற்று 10 மாதங்களாகியும் புதிய தலைவர் இன்னும் நியமிக்கப்படவில்லை.
தமிழகத்தில் பல தனியார் பள்ளிகளின் கட்டண விகிதங்கள் கடந்த கல்வியாண்டுடன் முடிவடைந்த நிலையில், அப்பள்ளிகளுக்கான புதிய கட்டண விகிதங்கள் கடந்த மே மாதத்திற்கு முன் நிர்ணயிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், கட்டண நிர்ணயக்குழுவின் தலைவர் பதவி காலியாக இருந்ததால் புதிய கல்விக்கட்டணங்கள் நிர்ணயிக்கப்படவில்லை. இதைப் பயன்படுத்திக்கொண்டு தமிழ்நாட்டில் பல தனியார் பள்ளிகள் லட்சங்களில் கட்டணம் வசூலித்தன.
தனியார் பள்ளிகளின் கட்டணக் கொள்ளையை அனுமதிக்கும் நோக்குடன் திட்டமிட்டே கட்டண நிர்ணயக் குழுவுக்கு தலைவரை அரசு நிர்ணயிக்கவில்லை என்று தோன்றுகிறது.
தமிழ்நாடு தனியார் பள்ளிகள் கட்டண நிர்ணயக் குழுவுக்கு உடனடியாக புதிய தலைவரை நியமிக்க வேண்டும். அத்துடன், கல்விக்கட்டண கொள்ளையை தடுப்பதற்காக சி.பி.எஸ்.இ. வகுத்துள்ள விதிகள் அனைத்தும் மாநில பாடத்திட்ட பள்ளிகளுக்கும் பொருந்தும் என்று தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் ராமதாஸ் கூறியுள்ளார்.