அரவக்குறிச்சி தேர்தல்… கே.சி. பழனிச்சாமி நாளை வேட்புமனு தாக்கல்.. எ.வ. வேலு தகவல்
அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிட உள்ள திமுக வேட்பாளர் கே.சி. பழனிச்சாமி நாளை வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார்.
கரூர்: அரவக்குறிச்சியில் வரும் 19ம் தேதி நடைபெற உள்ள தேர்தலில் போட்டியிட உள்ள திமுக வேட்பாளர் கே.சி. பழனிச்சாமி நாளை வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார் என்று எம்எல்ஏ எ.வ. வேலு தெரிவித்துள்ளார்.
அரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம் ஆகிய 3 தொகுதிகளிலும் வரும் 19ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட முறையே கே.சி.பழனிச்சாமி, அஞ்சுகம், டாக்டர் சரவணன் ஆகியோர் அறிவிக்கப்பட்டனர்.
இந்த நிலையில், நேற்று வேட்புமனு தாக்கல் இந்த மூன்று தொகுதிகளிலும் தொடங்கியது. இதனையடுத்து, திமுக சார்பில் அரவக்குறிச்சியில் போட்டியிடும் வேட்பாளர் கே.சி. பழனிச்சாமி நாளை வேட்புமனுவை தாக்கல் செய்கிறார் என்று கரூரில் செய்தியாளர்களை சந்தித்த திமுக எம்எல்ஏ எ.வ.வேலு கூறியுள்ளார்.
மேலும், வரும் 30ம் தேதி தேர்தல் பணிமனையை சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் திறந்து வைப்பார் என்றும் அரவக்குறிச்சித் தொகுதியில் போட்டியிடும் கே.சி. பழனிச்சாமிக்கு ஆதரவு கேட்டு பிரச்சாரத்திற்கு மு.க. ஸ்டாலின் வர உள்ளார் என்றும் வேலு தெரிவித்தார்.
முன்னதாக, கே.சி. பழனிச்சாமி போட்டியிடும் தொகுதியில் நேற்று பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார்.
கடந்த மே மாதம் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலின் போது அரவக்குறிச்சி, தஞ்சாவூர் ஆகிய இரண்டு தொகுதிகளிலும் பணப்பட்டுவாடா புகார் எழுந்ததையடுத்து, இங்கு நடைபெற வேண்டிய தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.