தமிழக மீனவரை சுட்டுக் கொன்ற கர்நாடக வனத்துறை அதிகாரி: சோதனைச் சாவடிக்கு தீ வைப்பு- பதற்றம்
சேலம்: மேட்டூர் அருகே தமிழக மீனவரை கர்நாடக வனத்துறை அதிகாரி சுட்டுக் கொலை செய்த சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் எதிரொலியாக கர்நாடக வனத் துறை சோதனைச் சாவடிக்கு தீ வைக்கப்பட்டது.
சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே தமிழக-கர்நாடக எல்லையில் உள்ள கோவிந்தப்பாடி, செட்டிப்பட்டி உள்ளிட்ட மலைக் கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் பாலாறு, காவிரி ஆற்றில் மீன் பிடிப்பது வழக்கம்.
தீபாவளிக்கு முந்தைய தினமான கடந்த 21 ஆம் தேதி, கோவிந்தப்பாடியை சேர்ந்த ராஜா (42), செட்டிப்பட்டியைச் சேர்ந்த பழனி (40), நெட்டைகாலன் கொட்டாய் கிராமத்தை சேர்ந்த முத்துசாமி உள்ளிட்டோர், கர்நாடக மாநில எல்லைக்குள்பட்ட பாலாறு பகுதிக்கு மீன் பிடிக்க சென்றதாகவும், அவர்கள் மீது கர்நாடக வனத் துறையினர் துப்பாக்கியால் சுட்டதாகவும் கூறப்படுகிறது.
இதில், ராஜா, முத்துசாமி, பழனி ஆகியோருக்கு குண்டு காயங்கள் ஏற்பட்டுள்ளது. இதில், ராஜா, முத்துசாமி ஆகியோரை மட்டும் உடன் வந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கொளத்தூருக்கு கொண்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. பழனியின் நிலை குறித்து தகவல் தெரியாததால், அவர் உறவினர்கள் கொளத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்கள்.
இந்நிலையில், அடிப்பாலாறு வனப்பகுதி ஆற்றில் பழனியின் உடல் மிதப்பது நேற்று தெரிய வந்தது. அவரது உடலில் துப்பாக்கிக் குண்டு காயங்களும், பல இடங்களில் வெட்டுக் காயங்களும், மர்ம உறுப்பு அறுக்கப்பட்டு சிதைக்கப்பட்டிருப்பதாகவும் தகவல் பரவியது.
தமிழக கிராம மக்கள் ஆத்திரம்
இதில், ஆத்திரமடைந்த தமிழக கிராம மக்கள், தமிழக-கர்நாடக எல்லையில் மேட்டூர்-மாதேஸ்வரன் மலை சாலையில் மறியலில் ஈடுபட்டனர். மேலும், பாலாறு பகுதியில் உள்ள கர்நாடக வனத் துறையினரின் இரு சோதனைச் சாவடிகளையும் அடித்து நொறுக்கி, தீ வைத்துக் கொளுத்தினர். சோதனைச் சாவடியில் இருந்த வயர்லெஸ் சாதனங்கள், பைக், ஆண்டெனா உள்ளிட்டவற்றை எரித்தும், உடைத்தும் சேதப்படுத்தினர்.
பேருந்து போக்குவரத்து நிறுத்தம்
இதையடுத்து, இரு மாநிலங்களுக்கு இடையேயான பேருந்து உள்ளிட்ட அனைத்து வகையான போக்குவரத்துகளும் நிறுத்தப்பட்டன. தமிழக வாகனங்கள் கொளத்தூரிலும், கர்நாடக மாநில வாகனங்கள் மாதேஸ்வரன் மலையிலும் நிறுத்தப்பட்டன.
மீனவர் சடலத்துடன் மறியல்
இந்த தகவலறிந்த தமிழக, கர்நாடக அதிகாரிகளும், போலீஸாரும் பாலாறு பகுதிக்கு விரைந்தனர். தமிழக கிராமங்களை சேர்ந்த விவசாயிகள், மீனவர்கள் பழனியின் சடலத்தை எடுக்கவிடாமல் காவல் துறையினரை தடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பல மணி நேரப் போராட்டம், பல்வேறு கட்டப் பேச்சுவார்த்தைகளுக்கு பின் விலக்கிக் கொள்ளப்பட்டது.
மைசூரில் பிரேத பரிசோதனை
இதையடுத்து, பழனியின் சடலத்தை மீட்ட கர்நாடக காவல் துறையினர், அதை பிரேத பரிசோதனைக்காக மைசூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணைக்கு உத்தரவு
இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது. 48 மணி நேரத்தில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்றும், இதற்காக வனத் துறையின் உயர்நிலைக் குழுவை அமைக்கவும் கர்நாடக அரசின் கூடுதல் முதன்மைச் செயலர் மதன் கோபால் அந்த மாநில அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.