தீபாவளி.. ஊருக்குப் போறதா இருந்தா போலீஸ்ல சொல்லிட்டுப் போங்க.. கமிஷனர் ஜார்ஜ்
சென்னை: தீபாவளி பண்டிகையொட்டி சொந்த ஊர்களுக்கு செல்பவர்கள் அந்தந்த காவல் நிலையங்களில் தகவல் தெரிவிக்க வேண்டும் என்று பொதுமக்களுக்கு போலீசார் அறிவுறுத்துள்ளனர்.
வெளி மாவட்டங்களில் இருந்து சென்னை வந்து தங்கியிருக்கும் மக்கள் தீபாவளி பண்டிகையைக் கொண்டாட தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். அப்படி, இந்த ஆண்டு தீபாவளிக்கு சொந்த ஊர்களுக்கு செல்லும் பொதுமக்கள் தாங்கள் வசித்து வரும் வீடுகள் பற்றிய தகவலை அந்தந்த காவல் எல்லைக்கு உட்பட காவல் நிலையங்களில் கட்டாயம் தெரிவிக்க வேண்டும் என்று போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.
அதன்படி, வெளியூர் செல்லும் பொதுமக்கள் தாங்கள் செல்லும் தேதி மற்றும் திரும்பி வரும் தேதிகள் குறித்து அந்தந்த காவல்நிலையங்களில் தகவல் கட்டாயம் அளிக்க வேண்டும். இதற்காக, சென்னை மாநகர காவல் எல்லைக்கு உட்பட்ட 135 காவல் நிலையங்களிலும் பூட்டியிருக்கும் வீடுகள் குறித்த பதிவேடு பராமரிக்கப்பட்டு வருகிறது. அந்த பதிவேட்டில் வெளியூர் செல்லும் நபர்களின் தகவல்கள் பதிவு செய்யப்பட்டு இருக்கும். அதில் உள்ள தகவலின்படி பூட்டப்பட்டுள்ள வீடுகளுக்கு அந்தந்த காவல் நிலையத்தில் உள்ள போலீசார் சென்று வீட்டின் எதிரே தொங்கவிடப்பட்டுள்ள வருகை பதிவேட்டில் கையெழுத்து போட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள்.
அதேபோல், பொது மக்கள் தங்கள் பகுதிகளில் சந்தேகத்திற்கு இடமான வகையில் யாரேனும் சுற்றி திரிந்தால் அவர்கள் குறித்து தகவல் போலீசாருக்கு தெரிவிக்க வேண்டும். இதற்காக போலீசார் துண்டு பிரசுரம் பொது மக்களுக்கு வழங்கி வருகின்றனர். பொதுமக்கள் அவசர உதவிக்கு 100 தொடர் கொள்ளவும் 95000 99100 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.