விஜயகாந்த்துக்கு எதிரான பெரம்பலூர் கோர்ட் பிடிவாரண்ட் ரத்து: செப். 12-ல் நேரில் ஆஜராக உத்தரவு
பெரம்பலூர்: முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாக பேசிய வழக்கில் தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடிவாரண்ட்டை பெரம்பலூர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. செப்டம்பர் 12-ந் தேதி விஜயகாந்த் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.
பெரம்பலூர் மேற்கு வானொலி திடலில் 14.8.2012 அன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், முதல்வர் ஜெயலலிதாவின் நற்பெயருக்கும், புகழுக்கும் களங்கம் ஏற்படுத்தும் நோக்கில் விஜயகாந்த் பேசியதாக புகார் எழுந்தது. அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி, பெரம்பலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் கடந்த 23.11.2012-ஆம் தேதி அரசு வழக்கறிஞர் கே.குலோத்துங்கன் மனுத் தாக்கல் செய்தார்.
இந்த மனு மீதான விசாரணையில் விஜயகாந்த் நேரில் ஆஜராகாததால் அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து கடந்த 10-ந் தேதி உத்தரவிட்டார் நீதிபதி ஏ. நஷிமா பானு. இந்த நிலையில் விஜயகாந்துக்கு எதிரான பிடிவாரண்ட்டை ரத்து செய்யக் கோரி, தேமுதிக வழக்கறிஞர் பாலாஜி நேற்று மனுத் தாக்கல் செய்தார்.
இம்மனுவை ஏற்றுக்கொண்டு பிடிவாரண்ட்டை ரத்து செய்து செப்டம்பர் 12-ந் தேதி விஜயகாந்த் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என நீதிபதி சஞ்சீவி பாஸ்கர் உத்தரவிட்டார்.