ஜெ. பதவியேற்புக்கு வராத அருண் ஜேட்லி, சுஷ்மா சுவராஜ், நாயுடு, நவீன் பட்நாயக்!
சென்னை: முதல்வர் ஜெயலலிதா பதவியேற்பு விழாவுக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட யாருமே இன்று வரவில்லை. அவர்கள் அழைக்கப்படவில்லையா அல்லது அழைத்தும் வரவில்லையா என்று தெரியவில்லை.
ஜெயலலிதா இன்று மீண்டும் முதல்வரானார். அவரது பதவியேற்பு விழா சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் இன்று நடந்தது.
இந்த விழாவுக்கு மத்திய அமைச்சர்கள் பலர் வரவுள்ளதாகவும், சில மாநில முதல்வர்கள் வரவுள்ளதாகவும் கூறப்பட்டது. குறிப்பாக ஜெயலலிதாவுக்கு மிகவும் நெருங்கிய நண்பரான நிதியமைச்சர் அருண் ஜேட்லி, வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், ரவிசங்கர் பிரசாத் ஆகியோர் வரலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.
அதேபோல ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, ஒடிஷா முதல்வர் நவீன் பட்நாயக் ஆகியோரும் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும் இவர்கள் யாரும் வரவில்லை. மத்திய அரசிலிருந்து வந்த ஒரே பிரதிநிதி மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் மட்டுமே.
இவர் தவிர பாஜக தரப்பில் எச்.ராஜா, இல. கணேசன் ஆகியோர் மட்டுமே.