ஜனாதிபதியை சந்திக்கும் எதிர்க்கட்சிகள்.. அவசரமாக டெல்லி பறந்த செங்கோட்டையன்!
குடியரசுத் தலைவரை திமுகவினர் இன்று சந்திக்க உள்ள நிலையில் தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவசரமாக அதிகாலையில் டெல்லி புறப்பட்டு சென்றுள்ளார்.
சென்னை : தமிழக அரசியல் நிலவரம் குறித்து குடியரசுத் தலைவரிடம் எடுத்துச் சொல்ல திமுகவினர் டெல்லி சென்றுள்ள நிலையில் அமைச்சர் செங்கோட்டையன் அவசரமாக டெல்லி பறந்துள்ளார்.
முதல்வர் பழனிசாமி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெறுவதாக டிடிவி. தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 19 பேர் ஆளுநரை சந்தித்து மனு அளித்தனர். இதனையடுத்து முதல்வர் பழனிசாமி அரசு மீது நம்பிக்கை வாக்கு கோர ஆளுநர் உத்தரவிட வேண்டும் என்று திமுக வலியுறுத்தியது. இதே போன்று தமிழக அரசியல் கட்சிகளான காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியினர் ஆளுநரை சந்தித்து எடப்பாடி பழனிசாமி அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று வலியுறத்தினர்.
ஆனால் எதிர்ப்பு தெரிவித்த 19 எம்எல்எக்களும் அதிமுகவில் இருப்பதால் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது என்று ஆளுநர் கூறிவிட்டதாக திருமாவளவன் நேற்று தெரிவித்திருந்தார். இதனையடுத்து எதிர்க்கட்சித்தலைவர் ஸ்டாலின் திமுக தன்னிடம் இருக்கும் பந்தை பயன்படுத்தும் என்று கூறிய நிலையில் இன்று காலை குடியரசுத் தலைவரை சந்திக்க நேரம் பெற்றனர்.
இதனையடுத்து ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவினர் டெல்லி சென்றுள்ளனர். முதல்வர் பழனிசாமி அரசு பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிடாத நிலையில், குடியரசுத் தலைவர் இந்த விஷயத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனு கொடுக்க உள்ளனர்.
இந்நிலையில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து முதல்வர் பழனிசாமி நேற்று இரவு அவசர ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது. இந்த ஆலோசனையில் மூத்த அமைச்சர்கள் செங்கோட்டையன், தங்கமணி, வேலுமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து பாஜகவிடம் ஆலோசனை கேட்க உள்ளதாக தெரிகிறது, இதற்காக அதிகாலையிலேயே அமைச்சர் செங்கோட்டையன் டெல்லி சென்றுள்ளார்.