திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் தொடங்கியது
நவம்பர் 19ம் தேதி தேர்தல் நடைபெற உள்ள 3 தொகுதி தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று காலை 11 மணிக்கு துவங்குகிறது. நவம்பர் 2ம் தேதிவரை வேட்பு மனு தாக்கல் செய்யலாம்.
சென்னை: தமிழகத்தில் தேர்தல் நடைபெற உள்ள தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் தொகுதிகளில் இன்று காலை 11 மணிக்கு வேட்புமனு தாக்கல் தொடங்கியது. வேட்புமனு தாக்கல் செய்யும் அலுவலகங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. புதுச்சேரியிலும் இடைத்தேர்தல் நடைபெற உள்ள நெல்லித்தோப்பு தொகுதியிலும் இன்று வேட்புமனு தாக்கல் தொடங்கியுள்ளது.
தமிழகத்தில் நவம்பர் 19ம் தேதி தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஆளும் அதிமுக, எதிர்கட்சியான திமுக, பாமக மட்டுமே இதுவரை வேட்பாளர்களை அறிவித்துள்ளது. வேட்புமனு தாக்கல் செய்யும் முதல்நாளான இன்று சேலத்தைச் சேர்ந்த பத்மராஜன் திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் போட்டியிட மனு தாக்கல் செய்தார். இது 177 முறையாகும்.
வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கி நவம்பர் 2ம் தேதிவரை தாக்கல் செய்யலாம். 3ம் தேதி வேட்பு மனுக்கள் பரிசீலிக்கப்படும். நவம்பர் 5ம் தேதிக்குள், வேட்பு மனுவை வாபஸ் பெறலாம். நவம்பர் 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும். 22ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்
3 தொகுதிகளில் தேர்தல்
தமிழகத்தில் கடந்த மே மாதம் பொதுத்தேர்தல் நடந்தது. அப்போது பணப்பட்டுவாடா புகாரின் பேரில் தஞ்சை மற்றும் அரவக்குறிச்சி ஆகிய தொகுதிகளின் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. இதனையடுத்து 232 தொகுதிகளுக்கு மட்டும் தேர்தல் நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. திருப்பரங்குன்றம் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற சீனிவேல் மரணம் அடைந்தார். எனவே அந்த தொகுதி காலியாக இருந்தது. இந்த தொகுதிகளுக்கு 6 மாதங்களுக்குள் தேர்தல் நடத்தி முடிக்கப்பட வேண்டும் என்ற விதி உள்ளது. இதையடுத்து காலியாக உள்ள அந்த மூன்று தொகுதிகளுக்கும் நவம்பர் 19ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தேர்தல் அலுவலர்கள்
அரவக்குறிச்சி தேர்தல் நடத்தும் அலுவலராக, கலால் துணை ஆணையர், தஞ்சாவூர் தேர்தல் நடத்தும் அலுவலராக, ஆர்.டி.ஓ, திருப்பரங்குன்றம் தேர்தல் நடத்தும் அலுவலராக, மாவட்ட வழங்கல் அலுவலரும் நியமிக்கப்பட்டு உள்ளனர். தேர்தலில் போட்டியிடுவோர், இவர்களிடம் வேட்பு மனு தாக்கல் செய்யலாம்.
பாதுகாப்பு ஏற்பாடுகள்
அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் அரவக்குறிச்சி தாசில்தார் அலுவலகத்தில் தேர்தல் அதிகாரி சைபுதீனிடம் காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை மனுதாக்கல் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வேட்பு மனு தாக்கலையொட்டி அரவக்குறிச்சி தாசில்தார் அலுவலகம் மற்றும் சுற்றியுள்ள பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
வீடியோவில் பதிவு
மனு தாக்கல் செய்ய வருபவர்கள், தங்களது வாகனங்களை, தாசில்தார் அலுவலகத்தில் இருந்து 100 மீட்டர் தள்ளி நிறுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 3 வாகனங்கள் மட்டும் மனு தாக்கல் நடைபெறும் பகுதிக்குள் செல்ல அனுமதி அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மனு தாக்கல் செய்ய வரும் வேட்பாளருடன் 4 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். எனவே மனு தாக்கல் செய்ய வருபவர்கள் தேர்தல் விதிகளை கடைபிடிக்க வேண்டுமென அதிகாரி சைபுதீன் கேட்டுக்கொண்டுள்ளார். வேட்புமனு தாக்கல் அனைத்தும் வீடியோ பதிவு செய்யப்படுகிறது.
தஞ்சாவூர் ஆர்டிஓ அலுவலகம்
தஞ்சாவூர் தொகுதியில் போட்டியிட விரும்புபவர்கள் தஞ்சாவூர் மணிமண்டபம் அருகே உள்ள கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியர் (பொறுப்பு) இன்னாசி முத்துவிடம் வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால் பணப்பட்டுவாடாவை தவிர்க்கும் வகையில் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
புதுச்சேரியில் வேட்புமனு தாக்கல்
வேட்புமனு தாக்கல் புதுச்சேரியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ள, நெல்லித்தோப்பு தொகுதியிலும், இன்று வேட்பு மனு தாக்கல் தொடங்கியுள்ளது. புதுச்சேரி முதல்வர் நாரயணசாமியும், அதிமுக வேட்பாளர் ஓம்சக்தி சேகரும் வேட்பாளர்களாக களத்தில் உள்ளனர். நாராயணசாமி நவம்பர் 2ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்வார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.