ஜனாதிபதி தேர்தலுக்கு பின் சட்டசபைக்கு நிச்சயம் தேர்தல்… ஸ்டாலின் உறுதி
ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னர் தமிழகத்திற்கு நிச்சயம் தேர்தல் நடைபெறும் என்று எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
திருவள்ளூர்: அடுத்த மாதம் நடைபெற உள்ள ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னர் சட்டசபைத் தேர்தல் தமிழகத்தில் நிச்சயம் வரும் என்று எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் குளங்கள் திமுக சார்பில் தூர் வாரப்படும் பகுதியை திமுக செயல் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க. ஸ்டாலின் இன்று பார்வையிட்டார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் ஸ்டாலின் கூறியதாவது:
ஆர்.கே. நகர் பணப்பட்டுவாடா தொடர்பாக முதல்வர் உள்பட அமைச்சர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதற்கு உரிய நடவடிக்கைகள் தலைமை செயலாளரோ அரசோ எடுக்கவில்லை. ஆர்.டி.ஐ. மூலமாகத்தான் அந்த செய்தி கண்டுபிடிக்கப்பட்டு மக்களுக்கு தெரிய வந்தது. அதுகுறித்த வழக்கு கூட நீதிமன்றத்தில் உள்ளது.
சபாநாயகருக்கு ஆளுநர் ரகசிய கடிதம்
இந்தப் பிரச்சனை குறித்து சட்டசபையில் பேச சபாநாயகர் அனுமதி தருவதில்லை. ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்து இந்தப் பிரச்சனை குறித்து புகார் அளித்துள்ளோம். அந்தப் புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சபாநாயகருக்கு ஆளுநர் கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தைக் கூட சட்டசபையில் சபாநாயகர் உறுப்பினர்களுக்கு தெரிவிக்க மறுக்கிறார். மேலும், அந்தக் கடிதம் தனக்கும் ஆளுநருக்குமான ரகசிய கடிதம் என்று கூறுகிறார்.
சபாநாயகரின் சர்வாதிகாரம்
அந்த கடிதம் ராஜ்பவன் அலுவலகத்தில் இருந்து வெளியிடப்பட்டுள்ளது. அதில் ஒன்று ரகசியம் இல்லை. சர்வாதிகார போக்கில் சட்டசபையை சபாநாயகர் நடத்திக் கொண்டிருக்கிறார். அதையும் மீறி, இந்தப் பிரச்சனை தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கிறோம்.
விரைவில் சட்டசபைத் தேர்தல்
ஜனாதிபதி தேர்தல் முடிந்த உடன் நிச்சயமாக தமிழகத்தில் சட்டசபை தேர்தல் வரத்தான் போகிறது. அதில் எந்த சந்தேகமும் இல்லை.
நீட் தேர்வு
சட்டசபையில் நீட் தேர்வு தொடர்பான சட்டம் கொண்டு வர குரல் கொடுத்தோம். அதன் பிறகு இது தொடர்பாக சட்டசபையில் தீர்மானம் கொண்டு வந்த போது ஏகமனதாக நிறைவேற்ற துணை நின்றோம். இந்தத் தீர்மானம் முறையாக ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும். ஆனால் அதனை ஜனாதிபதிக்கு தமிழக அரசு முறையாக அனுப்பி வைக்கவில்லை. இது தொடர்பாக ஜனாதிபதி மாளிகை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.
மக்கள் மீது அக்கறை
இதைப்பற்றி எல்லாம் அவர்களுக்கு கவலை இல்லை. ஆட்சியை எப்படி தக்க வைத்துக் கொள்வது, 2 கோஷ்டிகளாக பிரிந்திருந்தாலும் எப்படி கொள்ளை அடிப்பது என்பதில் கவனமாகவும் அக்கறையாகவும் அதிமுகவினர் இருக்கிறார்கள் என்று ஸ்டாலின் கூறினார்.