திமுக உறுப்பினர்கள் மீது சபாநாயகர் வீண் பழி சுமத்துகிறார்: ஸ்டாலின்
சென்னை: தி.மு.க. உறுப்பினகள் மீது வேண்டுமென்றே சபாநாயகர் அபாண்டமாக வீண் பழி சுமத்துகிறார். தவறான குற்றச்சாட்டை முன் வைக்கிறார்.
எந்த கால கட்டத்திலும் சட்டசபையில் தி.மு.க. கண்ணிய குறைவுடன் நடந்து கொள்வதில்லை என்று எதிர்கட்சித்தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
ஜெயலலிதா சொல்லியதையே சபாநாயகர் தீர்ப்பாக வழங்கி இருக்கிறார் என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
நிதிநிலை அறிக்கையின் மீது வியாழக்கிழமை நடைபெற்ற விவாதத்தின்போது, சட்டம்-ஒழுங்கு பற்றி திமுக எம்எல்ஏக்கள் பேசியதற்கு பதிலாக கைத்தறித் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன், திருவாரூரில் நடந்த திமுக உறுப்பினரின் கொலை தொடர்பாகக் கூறினார். அதை அவைக் குறிப்பிலிருந்து நீக்க வேண்டும் என திமுகவினர் கோரினர்.
அவைக் குறிப்புகளை வாங்கி தீவிரமாகப் பார்வையிட்டு பரிசீலித்தேன். அதில், முழுக்க, முழுக்க திமுக ஆட்சியிலே இருந்த சட்டம்-ஒழுங்கு பற்றித்தான் அமைச்சர் விமர்சனம் செய்திருக்கிறார். ஆகவே, அவர் வழக்குக்கோ, வழக்குக்கு குந்தகம் விளைவிக்கும்படியோ பேசவில்லை. எனவே, அமைச்சர் பேசியது அவைக் குறிப்பிலிருந்து நீக்கத் தேவையில்லை என உத்தரவிடுகிறேன்.
இதேபோன்று, அதிமுக எம்எல்ஏக்கள் கே.எஸ்.தென்னரசு, வி.வி.ராஜன் செல்லப்பா ஆகியோர் பேசியதையும் அவைக் குறிப்பிலிருந்து நீக்கத் தேவையில்லை. சர்க்காரியா கமிஷன் பற்றி ராஜன் செல்லப்பா பேசினார். அது இந்தப் பேரவையில் பலமுறை விவாதித்து அவைக் குறிப்பிலும் இடம்பெற்றுள்ளது.
அவை மரபுகளுக்கு மாறாக, விதிகளுக்குப் புறம்பாக பேரவையில் பேசுவதைத் தவிர்க்கப்பட வேண்டிய சொற்களாக அவர்கள் பேசியது இல்லை. ஏற்கெனவே இதுபோன்ற முன்மாதிரிகள் உள்ளதால், அவற்றை அவைக் குறிப்பிலிருந்து நீக்க வேண்டிய அவசியமில்லை என்று சபாநாயகர் தனபால் கூறினார்.
மேலும் திமுக உறுப்பினர்கள் அன்பழகன் மற்றும் ரங்கநாதன் அவையில் அநாகரிகமாக நடந்து கொள்கிறார்கள். அமைச்சர்களை கிண்டல் செய்யும் வகையில் அவர்கள் நடந்து கொள்கின்றனர். பேரவை தலைவரை பார்த்து ஒருமையில் பேசுவதும், தரக்குறைவாக பேசுவதும் இந்த மாமன்றம் இப்படித்தான் நடக்க வேண்டும் என்று வலியுறுத்துவதும் ஏற்கதக்கதல்ல என்றும் குற்றம் சாட்டியிருந்தார்.
இதனிடையே தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் இன்று அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், தி.மு.க. உறுப்பினர்கள் மீது வேண்டுமென்றே சபாநாயகர் அபாண்டமாக வீண் பழி சுமத்துகிறார் என்றார்.
தவறான குற்றச்சாட்டை முன் வைக்கிறார். எந்த கால கட்டத்திலும் சட்டசபையில் தி.மு.க. கண்ணிய குறைவுடன் நடந்து கொள்வதில்லை என்றார் ஸ்டாலின்.
முக்கிய பிரச்சனைகளை சட்டசபையில் எழுப்புகிறோம், ஜனநாயக முறைப்படி அங்கு தி.மு.க. செயலாற்றி வருகிறது. ஆனால் எங்கள் கேள்விகளுக்கு உரிய பதில் சொல்லாமல் சம்பந்தம் இல்லாமல் சில விளக்கங்களை அமைச்சர்கள் சொல்கிறார்கள். அவர்களே பிரச்சனைகளை உருவாக்குகிறார்கள்.
நாங்கள் கேட்கும் கேள்விகளுக்கு நேரடியாக பதில் சொல்வதில்லை. மாறாக அபாண்டமாக பழி சுத்துகிறார்கள். சபாநாயகரின் நேற்றைய தீர்ப்பு முதல் அமைச்சரின் அறிவுறுத்தலில் திட்டமிட்டு வழங்கப்பட்ட தீர்ப்பாகும்.
எங்கள் மீது சபாநாயகர் தேவையற்ற குற்றச்சாட்டுகளை கூறினாலும் நாங்கள் தொடர்ந்து ஜனநாயக முறைப்படி சபையில் செயலாற்றுவோம் என்றும் ஸ்டாலின் கூறினார்.