ரூ.1 கோடி ஏடிஎம் பணம் கொள்ளை வழக்கு - தூத்துக்குடி கோர்ட்டில் சரணடைய வந்த வாலிபர் ஓட்டம்
சென்னையில் வங்கிப் பணம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த நபர் தூத்துக்குடி கோர்ட்டில் சரண் அடைய வந்துவிட்டு தப்பி ஓடினார்.
தூத்துக்குடி: சென்னையில் ஏடிஎம்மில் நிரப்ப கொண்டு செல்லப்பட்ட ரூ.1 கோடி பணம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் தூத்துக்குடி நீதிமன்றத்தில் சரணடைய வந்த வாலிபர் திடீரென தப்பி சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் கடந்த மூன்றாம் தேதி லாஜி கேஸ் என்ற தனியார் நிறுவனம் சார்பில் ஏடிஎம் மையங்களில் நிரப்ப கொண்டு சென்ற பணத்தில் ரூ.118 கோடி பணம் கொள்ளையடிக்கப்பட்டது. இது தொடர்பாக பணத்துடன் தப்பி ஓடிய கார் டிரைவர் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகேயுள்ள வைத்தியலிங்கபுரத்தை சேர்ந்த இசக்கிபாண்டி எதூத்துக்குடி நீதிமன்றத்தில் கடந்த 6ம் தேதி சரணடைந்தார். போலீசார் அவரை காவலில் எடுத்து விசாரித்தனர்.
இசக்கி பாண்டி பணத்தை கொள்ளையடித்த பின்னர் நாசரேத் அருகே வசிக்கும் தனது தங்கை வடிவு வீட்டுக்கு வந்து சென்றதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து கடந்த 7ம் தேதி தனிப்படை போலீசார் வைத்தியலிங்கபுரத்தில் வடிவின் கணவர் கனகராஜிடமும், அவரது சகோதரர் ஜவஹரிடமும் விசாரணை நடத்தினர்.
கொள்ளையடித்த பணத்தில் ரூ.72 லட்சத்தை இசக்கி பாண்டி தங்களிடம் கொடுத்ததாக அவர்கள் தெரிவித்தனர். இந்த தகவலின் பேரில் வைத்திலிங்கபுரம் தேரி காட்டில் பிளாஸ்டிக் கவரில் புதைத்து வைக்கப்பட்டிருந்த ரூ.72 லட்சத்தை போலீசார் மீட்டு இருவரையும் கைது செய்தனர்.
கொள்ளையில் தொடர்புடைய மேலும் சிலரை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் இசக்கிபாண்டியின் மைத்துனர் வீரபாகு தூத்துக்குடி முதலாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சரண் அடைய வந்தார். இதில் அவர் எந்த வழக்கில் தேடப்படுபவர் என்பதை சரியாக குறிக்கவில்லை. இதையறிந்த வீரபாகு மாலையில் அங்கிருந்த நைசாக ஓட்டம் பிடித்தார். நீதிமன்றத்தில் வைத்து அவரை பிடிக்க முயற்சிக்காமல் போலீசார் கோட்டை விட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.