அட்டாக் பாண்டி என்கவுண்டரில் கொலை?: வதந்தியால் பரபரப்பு!!
தி.மு.க தலைமை செயற்குழு உறுப்பினராக இருந்த சுரேஷ்பாபு கடந்த ஜனவரி மாதம் 31ம் தேதி மதுரையில் வெட்டிக்கொல்லப்பட்டார். இதுகுறித்து சுப்பிரமணியபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.
இந்த வழக்கில் 17 பேர் பல்வேறு கோர்ட்டுகளில் சரண் அடைந்தனர். ஜெயிலில் அடைக்கப்பட்ட அவர்கள் அனைவரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டு விட்டனர்.
இந்த வழக்கு தொடர்பாக, மதுரை மாவட்ட வேளாண் விற்பனைக்குழு முன்னாள் தலைவரான வி.பி. பாண்டி என்கிற அட்டாக் பாண்டியை, கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து போலீசார் தேடி வருகின்றனர். ஆனால் போலீசின் பிடியில் சிக்காமல் அட்டாக்பாண்டி தொடர்ந்து தலைமறைவாக இருந்து வருகிறார்.
இந்நிலையில் இன்று தஞ்சாவூர் அருகில் அவரை போலீசார் சுட்டுக்கொன்றதாக வதந்தி பரவியது. ஊடகங்களிலும் இதுகுறித்து செய்தி வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து வெள்ளைத்துரை ஏடிஜிபி யிடம் விசாரித்தபோது, தமிழ்நாட்டில் தற்சமயம் எந்த என்கவுண்டரும் நடைபெறவில்லை என்று உறுதிபடுத்தியுள்ளார்.