அதிமுக கோஷ்டிகள் இணைப்பு முயற்சி தோல்வி- மாவட்ட பொறுப்பாளர்களை அறிவிக்கிறார் ஓபிஎஸ்
சென்னை: அதிமுகவின் கோஷ்டிகள் இணைப்பு முயற்சி மீண்டும் தோல்வி அடைந்துவிட்ட நிலையில் அதிமுக (புரட்சித் தலைவி அம்மா) அணியின் 25 மாவட்ட பொறுப்பாளர்களை அறிவிக்க இருக்கிறார் ஓபிஎஸ்.
அதிமுக ஓபிஎஸ், எடப்பாடி கோஷ்டிகள் இணையும் சூழ்நிலை இருந்து வந்தது. ஆனால் எடப்பாடி அரசுக்கு எதிராக ஓபிஎஸ் கோஷ்டி ஊழல் குற்றச்சாட்டுகளை சும்த்த இந்த முயற்சி தோல்வியடைந்தது.
மூவரின் திட்டம்
இது தொடர்பாக அதிமுக வட்டாரங்களில் நாம் விசாரித்த போது, ஓபிஎஸ்- எடப்பாடி- தினகரன் மூவருமே மற்றவர்களை இமேஜை காலி செய்வதில்தான் முனைப்பாக இருக்கின்றனர். ஒவ்வொருவரும் மற்றவர் வலிமையாக இருந்துவிடக் கூடாது என்பதில் ரொம்பவே கவனமாக இருக்கின்றனர்.
ஊழல் புகார்
அதிமுக முழுமையாக எடப்பாடி வசம் போய்விடக் கூடாது என்பதற்காக ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்துகிறது ஓபிஎஸ் அணி. ஓபிஎஸ் அணி வலிமையாகிவிடக் கூடாது என்பதற்காக அங்கிருக்கும் எம்.எல்.ஏக்களை வளைத்துப் போடுவதில் கொங்கு அமைச்சர்கள் படுமும்முரமாக உள்ளனர்.
தினகரன் ப்ளான்
இந்த இருவரையுமே தங்களது கட்டுப்பாட்டில் கொண்டுவந்து அதிமுக என்கிற கட்சியை கபளீகரம் செய்தே தீர வேண்டும் என்பதில் தினகரன்- திவாகரன் தரப்பு மும்முரமாக உள்ளது. இப்படி ஆளுக்கு ஒரு அஜெண்டாவை வைத்துக் கொண்டு செயல்படுகிறார்கள். ஆகையால் அதிமுக கோஷ்டிகள் இணைப்பு என்பது சாத்தியமே இல்லை என்கின்றன.
மாவட்ட பொறுப்பாளர்கள்
இதை உறுதிப்படுத்தும்விதமாக அதிமுக (புரட்சித் தலைவி அம்மா) அணியின் 25 மாவட்ட பொறுப்பாளர்களை முதல் கட்டமாக அறிவிக்க இருக்கிறாராம் ஓபிஎஸ். ஓபிஎஸ்-ன் இந்த தடாலடிக்கு பதிலடி தர மேலும் சில எம்.எல்.ஏக்களை வளைக்க பேரம் பேசுகிறது எடப்பாடி தரப்பு. இதைத்தான் எம்.எல்.ஏ. சண்முகநாதன் இன்று அம்பலப்படுத்தியிருக்கிறார் என்கின்றன அதிமுக வட்டாரங்கள்.