ரஜினி வந்தா எல்லாக் கட்சியும் அப்படியே அழிஞ்சு போயிருமாம்.. பயமுறுத்துகிறார் குருமூர்த்தி!
ரஜினி அரசியலுக்கு வந்தால் பலக் கட்சிகள் அழிக்கப்பட்டுவிடும் என ஆடிட்டர் குருமூர்த்தி தெரிவித்துள்ளார்.
சென்னை: ரஜினி அரசியலுக்கு வந்தால் பலக் கட்சிகள் அழிக்கப்பட்டுவிடும் என ஆடிட்டர் குருமூர்த்தி தெரிவித்துள்ளார். அரசியல் பிரவேசம் குறித்த ரஜினியின் அறிவிப்பு ஒட்டு மொத்த அரசியல் சூழலையும் மாற்றிவிடும் என்றும் அவர் கூறினார்.
ரஜினி தனது ரசிகர்களை சந்தித்ததில் இருந்தே அவர் அரசியலுக்கு வரும் முடிவில் தான் இருக்கிறார் என கூறப்பட்டு வருகிறது. ரசிகர்களிடமும் ரஜினி மறைமுகமாக தயாராக இருங்கள் போர் வரும் போது பார்த்துக்கொள்ளலாம் என்றார்.
இந்நிலையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி தான் அரசியலுக்கு வருவதாக தன்னை சந்திப்பவர்கள் கூறுவதை மறுக்கவில்லை என்றார். அதேநேரத்தில் ரஜினி அரசியலுக்கு வருவதற்கு தமிழக கட்சிகள் சிலவும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
தீர்க்கமாக உள்ளார் ரஜினி
இந்நிலையில் ஆடிட்டர் குருமூர்த்தி தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்தார். அப்போது கடந்த சில மாதங்களாக ரஜினிகாந்த் பேசிவருவதை பார்த்தால் அவர் அரசியலுக்கு வருவதில் தீர்க்கமாக உள்ளார் என்பது தெரிகிறது என்றார்.
பலக்கட்சிகள் அழிக்கப்பட்டுவிடும்
அரசியல் பிரவேசம் குறித்த ரஜினியின் அறிவிப்பு ஒட்டு மொத்த அரசியல் சூழலையே மாற்றிவிடும் என்றும் ஆடிட்டர் குருமூர்த்தி கூறினார். மேலும் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்கினால் பலக்கட்சிகள் அழிக்கப்பட்டுவிடும் என்றும் அவர் தெரிவித்தார்.
தனிக்கட்சி தொடங்கி கூட்டணி
ரஜினிக்காந்த் பெரும்பாலும் மாநிலக்கட்சி ஒன்றை தொடங்கி பாஜக போன்ற தேசியக் கட்சியுடன் கூட்டணி வைப்பார் என தெரிகிறது என்றும் அவர் கூறினார். இதுபோன்ற ஒரு மனநிலையில்தான் ரஜினிகாந்த் உள்ளார் என்று தான் நினைப்பதாகவும் குருமூர்த்தி கூறினார்.
மோடியின் ரசிகன்
ரஜினி அடிப்படையில் ஒரு ஆன்மீகவாதி என்ற அவர், இந்து மத கொள்கையில் ரஜினிக்கு உடன்பாடு உண்டு என்றார். ரஜினி ஏற்கனவே தான் மோடியின் ரசிகன் என கூறியதையும் குருமூர்த்தி சுட்டிக்காட்டினார்.
முறையானதாக இருக்காது
ரஜினிக்கும் மோடிக்கும் இடையே நல்ல உறவு உள்ளது. எனவேதான் அவர் பாஜகவுடன் கூட்டணி வைப்பார் என்று எண்ணுவதாகவும் குருமூர்த்தி கூறினார். அதேநேரத்தில் ரஜினிகாந்த் பாஜகவில் சேர்வது என்பது முறையானதாக இருக்காது என்றும் அவர் தெரிவித்தார்.
பாஜகவுக்கு என சில விதிகள்
ஏனென்றால் ரஜினிகாந்த் மிக உயர்வான மனிதர் என்றும் பாஜகவின் சில நடைமுறைகளால் அவரை கட்டுப்படுத்த முடியாது என்றும் அவர் கூறினார். பாஜகவுக்கு என சில விதிகள் உண்டு என்றும் குருமூர்த்தி தெரிவித்தார்.
எப்படி சரியாக இருக்கும்?
எடுத்துக்காட்டாக பொதுச்செயலாளர் வந்தால் அவரை மாநிலத் தலைவர் நேரில் சென்று சந்திக்க வேண்டும். ரஜினியைப் போன்ற, மக்கள் செல்வாக்குள்ள ஒரு தலைவர் ஒரு பொதுச்செயலாளரை நேரில் சென்று சந்திப்பது எப்படி சரியாக இருக்கும் என்றும் ஆடிட்டர் குருமூர்த்தி கேள்வி எழுப்பினார்.