உலகத் தொல்காப்பிய மன்றத்தின் தொடர்பொழிவும், எழுத்தாளர் ம. செயராம சர்மாவுக்குப் பாராட்டுவிழாவும்!
புதுச்சேரி: புதுச்சேரி உலகத் தொல்காப்பிய மன்றத்தின் சார்பில் புதுச்சேரி நீட இராசப்பையர் தெருவில் அமைந்துள்ள, செகா கலைக்கூடத்தில் 14.04.2017, வெள்ளிக் கிழமை, மாலை 6.30 மணி முதல் 8.30 மணி வரை தொல்காப்பியத் தொடர்பொழிவு நடைபெற்றது.
வில்லிசைவேந்தர் இ. பட்டாபிராமன் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடினார். முனைவர் ப. பத்மநாபன் வரவேற்புரையாற்றினார். முனைவர் மு.இளங்கோவன் அறிமுகவுரைற்றினார். முனைவர் சிவ. மாதவன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேராசிரியர் தெ. முருகசாமி தமிழ் இலக்கியங்களில் தொல்காப்பியத்தின் தாக்கம் என்ற தலைப்பில் உரையாற்றினார். தொல்காப்பியத்துள் குறிப்பிடப்படும் இலக்கணச் செய்திகள் சிலப்பதிகாரம், கம்பராமாயணம் உள்ளிட்ட நூல்களில் பொதிந்து கிடக்கும் தன்மையை மிகச் சிறப்பாக எடுத்துரைத்தார்.
ஆஸ்திரேலியாவிலிருந்து வருகை தந்த எழுத்தாளர் ம. செயராம சர்மாவின் எழுத்துப்பணியைப் பாராட்டும் வகையில், மரபுப் பாமணி என்ற விருதளித்து இந்த நிகழ்ச்சியில் பாராட்டப்பட்டது. மக்கள் பணியில் தம்மை ஈடுபடுத்திக்கொண்டு உழைத்துவரும் ஏம்பலம் செல்வம் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு சர்மா அவர்களுக்கு விருதளித்துப் பாராட்டினார்.
ஆஸ்திரேலியாவில் தமிழும் தமிழர்களும் தொடர்பான அரியதோர் கருத்துரையச் செயராம சர்மா வழங்கினார். தூ. சடகோபன், தனித்தமிழ்ப்பாவலர் தமிழியக்கன், திருவாசகம் உள்ளிட்டோர் கலந்துகொண்டு தமிழறிஞர்களைச் சிறப்பித்தனர்.
முனைவர் இரா. கோவலன் நன்றியுரை வழங்கினார். புதுச்சேரியைச் சேர்ந்த தமிழறிஞர்கள் திரளாக நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
செய்தி: முனைவர் மு. இளங்கோவன்
http://muelangovan.blogspot.in/