புதுச்சேரியில் புதிய ஆட்டோ கட்டணம் நிர்ணயம்.. டிச.15 முதல் அமல் !
புதுச்சேரி மாநிலத்தில் புதிய ஆட்டோ கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
புதுவை: புதுச்சேரியில் ஆட்டோ கட்டணம் நிர்ணயம் தொடர்பாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. புதிய ஆட்டோ கட்டணம் வரும் 15-ம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.
புதுச்சேரியில் இயக்கப்படும் ஆட்டோ ரிக்ஷாக்களுக்கான புதிய கட்டணத்தை அரசு நிர்ணயித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. ஆட்டோக்களுக்கான புதிய கட்டணங்கள் வரும் 15 ம் தேதி முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி காலை 5 மணி முதல் இரவு 10 மணி வரையில் 1.8 கி.மீ.,க்கு ரூ. 35 எனவும்,1.8 கி.மீ தூரத்திற்கு அடுத்த ஒவ்வொரு கி.மீ.,க்கும் ரூ.18 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. காத்திருக்கும் ஒவ்வொரு 5 நிமிடத்திற்கும் ரூ.5 எனவும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும் இரவு 10 மணி முதல் மறுநாள் காலை 5 மணி வரையில் பகல் நேர கட்டணத்துடன் 50 சதவீதம் கூடுதலாக வசூலித்து கொள்ளலாம். ஆட்டோ கட்டணத்திற்கு ஏற்ப அனைத்து ஆட்டோ ஓட்டுநர்களும் தங்களது மீட்டரை சரி செய்து கொள்ள வேண்டும் முன்கட்டண சேவை புதுச்சேரியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. முன் கட்டண ஆட்டோ சேவைக்கு கூடுதலாக 20 சதவீத கட்டணம் செலுத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது. தற்போது அமலுக்கு வந்திருக்கும் புதிய கட்டண பட்டியலை பயணிகளின் பார்வைக்கு ஆட்டோவில் தெரியும்படி வைக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.