கோரிக்கை நிறைவேறாவிட்டால் டெல்லியில் மே 25 முதல் விவசாயிகள் மீண்டும் போராட்டம்: அய்யாக்கண்ணு
தங்களது கோரிக்கைகள் நிறைவேறாவிட்டால் டெல்லியில் மே 25-ந் தேதி முதல் மீண்டும் விவசாயிகள் போராட்டம் நடைபெறும் என அய்யாக்கண்ணு அறிவித்துள்ளார்.
சென்னை: விவசாயிகளின் கோரிக்கைகள் தொடர்பாக உரிய முடிவு கிடைக்காவிட்டால் மே 25-ந் தேதி முதல் டெல்லியில் மீண்டும் போராட்டம் நடைபெறும் என்று தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
வறட்சி நிவாரணம், விவசாயிகளின் வங்கி கடன்கள் தள்ளுபடி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் 41 நாட்கள் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் பலவகை நூதனப் போராட்டங்களை நடத்தினர். ஆனால் மத்திய பாஜக அரசு இந்த விவசாயிகள் போராட்டத்தை கண்டுகொள்ளவில்லை.
நிர்வாணப் போராட்டம்
பிரதமர் மோடியை சந்திக்க அழைத்துச் செல்வதாக கூறி விவசாயிகளை அதிகாரிகள் ஏமாற்றினர். இதனால் பிரதமர் அலுவலகம் முன்பாக நிர்வாணப் போராட்டத்தை விவசாயிகள் நடத்த நாடே அதிர்ந்தது.
நிறைவேறாத கோரிக்கைகள்
டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்ற தமிழக விவசாயிகளின் போராட்டத்துக்கு வட இந்திய மாநில விவசாயிகளும் ஆதரவு தெரிவித்தனர். தமிழக அரசியல் தலைவர்கள், அமைச்சர்கள் டெல்லி சென்று விவசாயிகளை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். ஆனாலும் கோரிக்கைகள் எதுவும் நிறைவேறவில்லை.
போராட்டம் ஒத்திவைப்பு
இந்நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, திமுக செயல் தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோர் விடுத்த வேண்டுகோளை ஏற்று அய்யாக்கண்ணு தலைமையிலான விவசாயிகள் போராட்டம் முடிவுக்கு வந்தது. விவசாயிகள் அனைவரும் இன்று ரயில் மூலம் சென்னைக்கு திரும்பினர்.
எச்சரிக்கை
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் விவசாயிகளுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அய்யாக்கண்ணு, தமிழக அரசியல் தலைவர்களின் நெருக்கடியைத் தொடர்ந்து 15 நாட்களில் முடிவை தெரிவிப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. அப்படி முடிவை தெரிவிக்காவிட்டால் டெல்லியில் மே 25-ந் தேதி முதல் மீண்டும் போராட்டம் நடத்துவோம் என்றார்.