குற்றால அருவியில் அய்யப்ப பக்தர்கள் மட்டும் குளிக்க அனுமதி
நெல்லை: குற்றாலத்தில் மெயின் அருவியில் அய்யப்ப பக்தர்கள் மட்டும் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் மழையின் காரணமாக நெல்லை மாவட்ட மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியான குற்றாலம், ஐந்தருவி, பழைய
குற்றாலம் உள்ளிட்ட அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து 4வது நாளாக இன்று மதியம் வரை மெயின் அருவியில் வெள்ளம் நீடித்ததால் அய்யப்ப பக்தர்கள் உள்ளிட்ட யாரையும் குளிக்க அனுமதிக்கவில்லை.
இந்நிலையில் அருவிகளில் தற்போது தண்ணீர் வரத்து குறைந்துள்ளது. இருப்பினும் இன்று மாலை 4 மணி முதல் மெயின் அருவி பாதுகாப்பு வளையம் அருகில் சிறிதாக விழும் அருவியின் கிளை அருவியில் மட்டும் அய்யப்ப பக்தர்கள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.
அதே சமயம் பெண்கள் பகுதியில் தண்ணீர் வரத்து குறைந்தாலும் பெண்களை அருவியில் குளிக்க காவல்துறை அனுமதியளிக்கவில்லை.
பெண்கள் யாரும் அங்கு சென்று குளித்துவிடக் கூடாது என்பதற்காக பெண் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.