தம்பி மகன் நிச்சயதார்த்தத்தில் மு.க.அழகிரி - ஸ்டாலின் நேருக்கு நேர்...!
சென்னை: நடிகரும், திமுக தலைவர் கருணாநிதியின் மகன் மு.க.தமிழரசுவின் மகனுமான அருள்நிதி நிச்சயதார்த்த விழாவில் பிரிந்து கிடக்கும் அண்ணன் தம்பிகளான மு.க.அழகிரியும், மு.க.ஸ்டாலினும் கலந்து கொண்டனர். திமுக தலைவர் கருணாநிதியும் விழாவில் பங்கேற்றார்.
இணைந்து கலந்து கொண்டாலும் கூட அழகிரியும், ஸ்டாலினும் நேருக்கு நேர் பார்த்துக் கொள்ளவில்லை, பேசிக் கொள்ளவில்லை.
அருள்நிதிக்கு திருமணம் முடிவாகியுள்ளது. அவரது திருமண நிச்சயதார்த்தம் தி.நகரில் உள்ள ஒரு தனியார் நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது. இதில் கருணாநிதி குடும்பத்தார், அழகிரி மற்றும் ஸ்டாலின் குடும்பத்தார் கலந்து கொண்டனர்.
திமுகவிலிருந்து நீக்கப்பட்டு விட்ட மு.க.அழகிரி தனது குடும்பத்துடன் நிகழ்ச்சிக்கு வந்திருந்தார். அதேபோல திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினும் தனது மனைவியுடன் கலந்து கொண்டார். திமுக தலைவர் கருணாநிதியும் விழாவில் முக்கிய நாயனாக வீற்றிருந்தார்.
அழகிரியும், ஸ்டாலினும் விழாவில் நேருக்கு நேர் பார்த்துக் கொள்ளவில்லை, பேசிக் கொள்ளவில்லை. அவரவர் பாட்டுக்கு இருந்தனர். இவர்கள் கலந்து கொண்டது திமுகவினர் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாம். இதுவே ஆரம்பமாக இருக்கட்டும். எல்லாம் சுபமாக முடியட்டும் என்று அவர்கள் விரும்புகிறார்களாம்.