அப்துல்கலாம் பெயரில் அறிவியல் பல்கலைக்கழகம்… அழகிரி வலியுறுத்தல்
நாமக்கல்: டாக்டர் அப்துல்கலாம் பெயரில் ராமேஸ்வரத்தில் அறிவியல் பல்கலைக்கழகம் ஒன்றை அமைக்க வேண்டும்,அது தான் நாம் அவருக்கு செய்யும் மரியாதை என்று முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி கோரிக்கை விடுத்துள்ளார்.
தி.மு.க. மாநில விவசாய அணி செயலாளரும், எம்.பி.யுமான கே.பி.ராமலிங்கம் தாயார் அன்னபூரணி அம்மாள் கடந்த சில தினங்களுக்கு முன்பு காலமானார்.அவரது மறைவிற்கு இரங்கல் தெரிவிக்க முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி நாமக்கல் மாவட்டம் காளிப்பட்டியில் உள்ள கே.பி.ராமலிங்கத்தின் வீட்டிற்கு இன்று காலையில் வந்தார். பின்னர், அன்னபூரணி அம்மாள் உருவபடத்திற்கு மலர் வளையம் வைத்தும், மலர்கள் தூவியும் மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம் மறைவு இந்தியாவுக்கு மாபெரும் இழப்பு. தமிழ்நாட்டின் இதயமாக இருந்து, இந்தியாவின் இமயமாக மாறியவர் முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல்கலாம். மிக எளிமையாக இருந்தவர். அவரது எளிமை ஒரு முறை அல்ல, பல முறை கண்டுள்ளேன்.
தான் மத்திய அமைச்சராக இருந்தபோது தானும், மற்ற அமைச்சர்களும் விமானத்தில் முதல் வகுப்பில் சென்றுள்ளோம். ஆனால், அவர் ஜனாதிபதியாக இருந்த பிறகும் கூட 2ம் வகுப்பில் தான் பயணம் மேற்கொள்வார். அத்தகைய எளிமையாக இருந்தவர்.
ராமேஸ்வரத்தில் டாக்டர் அப்துல்கலாம் பெயரில் அறிவியல் பல்கலைக்கழகம் ஒன்றை அமைக்க வேண்டும் என மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கிறேன். அது தான் நாம் அவருக்கு செய்யும் மரியாதை என்றும் மு.க.அழகிரி கூறியுள்ளார்.