முல்லைப்பெரியாறில் பேபி அணை "வீக்".. நாதன் தலைமயிலான குழு எச்சரிக்கை..
குமுளி : முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்த வேண்டுமானால் பேபி அணையை பலப்படுத்த வேண்டும் என்று மத்திய நீர்வள ஆணைய தலைமைப் பொறியாளர் நாதன் தலைமையிலான மூவர் குழு எச்சரிக்கை விடுத்துள்ளது.
முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு தொடர்பாக மூவர் கண்காணிப்பு குழுவின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பின் பேட்டியளித்த மூவர் குழுவின் தலைவர் நாதன், மழைக்காலங்களில் அணையில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டதாக தெரிவித்தார்.
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த பேபி அணையை பலப்படுத்துவது அவசியம் என அவர் கூறினார்.
பேபி அணையை பலப்படுத்த தமிழக மற்றும் கேரள அரசுகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். ஆகஸ்ட் முதல் வாரம் அல்லது முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 130 அடியாக உயரும் போது அடுத்த ஆலோசனை கூட்டம் நடைபெறும் என நாதன் தெரிவித்தார்.
7 மாதங்கள் கழித்து மூவர் கண்காணிப்பு குழுவின் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.