திமுகவுக்காக பிரசாரமா.. பாக்யராஜ் பதிலளிக்க மறுப்பு!
ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்துக்கு தனது மனைவி பூர்ணிமாவுடன் சாமி கும்பிட வந்த நடிகர் இயக்குநர் பாக்யராஜ் திமுகவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வீர்களா என்ற கேள்விக்குப் பதிலளிக்க மறுத்து விட்டார்.
பாக்யராஜும், பூர்ணிமா பாக்யராஜும் ராமேஸ்வரம் கோவிலுக்கு வந்தனர். அங்கு அக்னிதீர்த்தக் கரையில் சிறப்பு வழிபாடு நடத்தினர். பின்னர் ஒரு புரோகிதர் வீட்டில் சிறப்புப் பூஜை செய்தனர். அதன் பின்னர் கோவிலுக்குச் சென்று வழிபட்டனர்.
அப்போது செய்தியார்கள் அங்கு வந்து விட்டனர். அவர்களைத் தடுத்து நிறுத்திய பாக்யராஜின் உதவியாளர்கள், இது கோவில், இங்கு வேண்டாம். அவர் தங்கியுள்ளவிடுதிக்கு வாருங்கள் என்று கேட்டுக் கொண்டனர்.
இதையடுத்து பாக்யராஜ் தங்கியிருந்த விடுதிக்கு செய்தியாளர்கள் விரைந்தனர். அங்கு பாக்யராஜ் தான் சென்னை செல்ல வேண்டும் என்று கூறி வேகமாகக் கிளம்ப முயற்சித்தார். இருந்தாலும் செய்தியார்கள் விடவில்லை. இதையடுத்து சற்று நின்றார் பாக்யராஜ்.
செய்தியாளர்கள் அவரிடம், தேர்தல் பிரசாரம் செய்ய தி.மு.க.வில் இருந்து அழைப்பு வந்துள்ளதா, என்று கேட்டனர். அதற்குப் பாக்யராஜ், குருவாயூர் போயிட்டு ராமேஸ்வரம் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்துருக்கேன். வேறேதும் இப்போதைக்கு சொல்வதற்கு இல்லை. உங்க கேள்விக்கு பதில் சொல்லணுங்குறதுக்காக எதையாவது சொல்ல முடியாது என்றபடியே கிளம்பிச் சென்று விட்டார்.