அரவிந்தர் ஆசிரமத்தை கையகப்படுத்த கோரி புதுச்சேரி சட்டசபை முற்றுகை- மறியலால் பதற்றம்
புதுச்சேரி: அரவிந்தர் ஆசிரம நிர்வாகத்தை மத்திய, மாநில அரசுகளே கையகப்படுத்தி நிர்வகிக்க கோரி காங்கிரஸ் கட்சியினர் புதுச்சேரி சட்டசபையை முற்றுகையிட்டதால் பதற்றம் ஏற்பட்டது.
இதேகோரிக்கையை வலியுறுத்தி தமிழ் அமைப்பினரும், விடுதலை சிறுத்தைகள் கட்சியினரும் மேற்கொண்ட சாலை மறியல், ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.
அரவிந்தர் ஆசிரமத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட மூன்று பேரின் தற்கொலை குறித்து ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதியைக் கொண்டு விசாரணை நடத்தக் கோரியும், ஆசிரம நிர்வாகத்தை மத்திய, மாநில அரசுகளே கையகப்படுத்தி நிர்வகிக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தியும் புதுச்சேரியில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது. நகரப் பகுதிகளில் மட்டுமல்லாது கிராமப் பகுதிகளிலும் முழு அடைப்பு நடைபெறுகிறது.
ஆசிரம விவகாரம்
பீகாரைச் சேர்ந்த பிரசாத் அவரது மனைவி சாந்தி தேவி ஆகியோர் புதுச்சேரி ஆசிரமத்திற்கு வந்து குடியேறினர். இவர்களின் மகள்கள் ஜெயஸ்ரீ, அருணாஸ்ரீ,ராஜஸ்ரீ, ஹேமலதா, நிவேதாஸ்ரீ ஆகிய ஐவரும் ஆசிரமத்தில் தங்கி சேவை செய்து வந்தனர்.
பாலியல் புகார்
கடந்த 2002ஆம் ஆண்டு 5 சகோதரிகளும் ஆசிரம நிர்வாகத்தின் மீது பாலியல் புகார் கூறவே,கோபம் கொண்ட நிர்வாகம் இவர்களை வெளியேற்ற முயன்றது.
ஆனால் இந்த சகோதரிகளில் வழக்கு தொடுக்கவே, உச்சநீதிமன்றமும், பிரசாத் குடும்பத்தினர் 2014 ஆண்டு டிசம்பர் 17ஆம் தேதி வெளியேற வேண்டும் என்று உத்தரவிட்டது.
கலவர நாளில்
இதனையடுத்து போலீசாரின் உதவியுடன் அவர்களை வெளியேற்ற ஆசிரமம் நடவடிக்கை எடுத்தது. அப்போது அவர்களில் ஹேமலதா, மேல்மாடிக்கு சென்று தற்கொலை செய்யப்போவதாக மிரட்டினார். இதனையடுத்து மீட்கப்பட்ட ஹேமலதாவும், குடும்பத்தினரும் வெளியேற்றப்பட்டனர்.
குடும்பத்தோடு தற்கொலை
கடந்த 18ஆம் தேதி இவர்கள் அனைவரும் கடலில் குதித்தனர். தமிழ்நாடு எல்லையான கோட்டக்குப்பம் பகுதியில் தாய் சாந்திதேவி, மகள்கள் அருணாஸ்ரீ, ராஜஸ்ரீ ஆகியேரின் சடலங்கள் மீட்கப்பட்டன. பிரசாத், ஜெயஸ்ரீ, ஹேமலதா ஆகியோர் உயிரோடு மீட்கப்பட்டனர்.
போராட்டம் தீவிரம்
இவர்களின் தற்கொலைக்கு ஆசிரமத்தின் பாலியல் ரீதியாக தொல்லைகளும், நெருக்கடிகளும்தான் காரணம் என புதுச்சேரியின் தமிழ் அமைப்புகளும், கட்சிகளும், ஆசிரமத்திற்கு எதிரான போராட்டத்தில் இறங்கியது. இதில் அரவிந்தர் ஆசிரமம், ஆசிரம பெட்ரோல் பங்க், ஆசிரம பல்பொருள் அங்காடி ஆகியவை அடித்து நொறுக்கப்பட்டது.
முழு அடைப்பு
இதையடுத்து, மூன்று பேர் தற்கொலைக்குக் காரணமான ஆசிரமத்தினை மத்திய, மாநில அரசுகள் கையகப்படுத்தி ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரியைக் கொண்டு நிர்வகிக்க வேண்டுமென்றும், அதுவரை ஆசிரமத்திற்கு சீல் வைக்க வேண்டுமெனவும்,சகோதரிகளின் தற்கொலை குறித்து ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதியைக் கொண்டு விசாரணை நடத்த வேண்டுமென்றும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது.
அரசியல் கட்சியினர் ஆதரவு
இந்த போராட்டத்திற்கு காங்கிரஸ் மற்றும் இடதுசாரிக் கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. அதேபோல், சினிமா காட்சிகளும் ரத்து செய்யப்பட்டுவதாக திரையரங்கு உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.
தேர்வு ஒத்திவைப்பு
மேலும், புதுச்சேரியில் இன்று நடைபெற இருந்த அரையாண்டு தேர்வுகள் ஜூன் 2ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுவதாக மாநில கல்வித்துறை அறிவித்துள்ளது.
கடைகள் அடைப்பு
முழு அடைப்பு போராட்டத்தையடுத்து புதுச்சேரி முழுவதும் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. தனியார் பேருந்துகளும் இயக்கப்படவில்லை. அரசு பேருந்துகள் மட்டும் குறைவான எண்ணிக்கையில் இயக்கப்படுகிறது.
பஸ் கண்ணாடி உடைப்பு
இன்று காலையில் இயக்கப்பட்ட அரசுப் பேருந்து, தனியார் பேருந்து, பள்ளி பேருந்து மீது கல்வீசித் தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால் அனைத்து பேருந்துகளும் உடனடியாக நிறுத்தப்பட்டது. இதனால் பேருந்து நிலையம் வெறிச்சோடிக் காணப்பட்டது.
துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு
ஒருசில அரசுப் பேருந்துகள் மட்டும் துப்பாக்கி ஏந்திய காவல்துறையினரின் பாதுகாப்புடன் இயக்கப்பட்டது. வெளியூர் செல்லும் பேருந்துகளுக்கு முன்னால் காவலர்களின் பாதுகாப்பு வாகனங்களின் மூலம் கன்னியக்கோயில் வரை அழைத்து செல்லப்பட்டு விடப்படுகின்றன. அதேபோல சென்னையில் இருந்து வரும் பேருந்துகள் புதுவையின் எல்லைப்பகுதியான கோரிமேட்டில் பயணிகளை இறக்கி விட்டு திரும்பி விடுகிறது.
சட்டசபை முற்றுகை
இந்நிலையில் ஆசிரமத்தை அரசு கையகப்படுத்த வேண்டுமென்று என்ற கோஷத்துடன் 50க்கும் மேற்பட்ட இளைஞர் காங்கிரசார், காவல்துறையினரின் பாதுகாப்பையும் மீறி அதிரடியாக புதுச்சேரியின் சட்டப்பேரவையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
சாலை மறியல் - ரயில்மறியல்
அதே போல ராஜா தியேட்டர் சிக்னலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சாலை மறியலில் ஈடுபட்டு ஆர்ப்பாட்டம் செய்ததால் அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். விடுதலை சிறுத்தை கட்சியினர், கடலூர் செல்லும் சாலையில் ஆசிரமத்திற்கெதிரான கோஷங்கள் எழுப்பி சாலை மறியலில் ஈடுபட்டதால் கைது செய்யப்பட்டனர்.
ரயில் மறியல்
தமிழர் அமைப்புகளும் இயக்கங்களும் ரயில் மறியல் செய்தும், பேருந்து நிலையத்தையும் முற்றுகையிட்டதால் கைது செய்யப்பட்டனர். பல்வேறு அரசியல் கட்சிகளும், தமிழர் அமைப்புகளும் ஆசிரமத்திற்கு எதிரான தீவிர போராட்டத்தில் இறங்கியிருப்பதால் வன்முறை சம்பவங்கள் நிகழாமல் இருக்க புதுச்சேரி முழுவதும் காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.
வெறிச்சோடிய புதுச்சேரி
புதுச்சேரியின் வர்த்தக வீதியான நேருவீதி உட்பட காந்திவீதி, அண்ணா சாலை போன்ற பகுதிகள் கடைகள் எதுவும் திறக்கப்படாததால் வெறிச்சோடிக் காணப்படுகிறது.