குற்றாலம் ஐந்தருவியில் வெள்ளப்பெருக்கு.. சுற்றுலா பயணிகள் குளிக்கத் தடை!
குற்றாலம்: குற்றாலம் ஐந்தருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
மேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் பகுதியில் பலத்த மழை பெய்து வருவதால், நெல்லை மாவட்டம் குற்றாலம் அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. கடந்த வாரம் சீசன் குறைவாக காணப்பட்ட நிலையில், கடந்த 3 நாட்களாக பகலிலும், இரவிலும் சாரல் மழை பெய்ததால் மெயினருவி, ஐந்தருவி, புலியருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து விழுகிறது. நேற்றிரவு முதல் விட்டு விட்டு விடிய, விடிய சாரல் மழை பெய்தது.
இதனைத்தொடர்ந்து சீசன் மீண்டும் களை கட்ட தொடங்கியது. இதனால், ஞாயிறு விடுமுறையன்று மெயின் அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. இன்றும் ரம்ஜான் விடுமுறை என்பதால் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
பழைய குற்றாலத்தில் மிதமாக தண்ணீர் விழுகிறது. மெயினருவியில் ஆர்ச்சைத் தொட்டு தண்ணீர் கொட்டுவதால் அங்கு கூட்டம் அலைமோதி வருகிறது. ஆண்களும், பெண்களும் ஆனந்தமாக ஆர்ப்பரிப்போடு கொட்டும் அருவி நீரில் ஆனந்தமாக குளித்து சென்ற வண்ணம் உள்ளனர்.
இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் தொடர் கனமழையால் ஐந்தருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. எனவே பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகள் குளிக்க காவல் துறை தடை விதித்துள்ளது. இதனால் ஐந்தருவிக்கு குளிக்க வந்த சுற்றுலா பயணிகள் குளிக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்துள்ளனர். ஐந்தருவியில் தண்ணீரின் அளவு குறையும் பட்சத்தில் மட்டுமே மீண்டும் குளிக்க அனுமதி வழங்கப்படாலம் என காவல்துறை விளக்கமளித்துள்ளது