பாரத் பந்த் எதிரொலி தமிழக- கேரளா எல்லையில் வாகனங்கள் நிறுத்தம்- மறியல் போராட்டம்!
செங்கோட்டை: நாடு தழுவிய அளவில் நடத்தப்பட்ட பாரத் பந்த் எதிரொலியால் தமிழக- கேரளா எல்லையில் வாகனங்கள் நிறுத்தப்பட்டன. தென்காசி உள்ளிட்ட பகுதிகளில் ஆர்ப்பாட்டம், மறியல் போராட்டங்கள் நடைபெற்றன.
நாடு தழுவிய அளவில் தொழிற்சங்கங்கள் நடத்திய இன்றைய முழு அடைப்புப் போராட்டம் பல மாநிலங்களில் பாதிப்பை ஏற்படுத்தியது. தமிழக - கேரளா எல்லையான நெல்லை மாவட்டம் செங்கோட்டை புளியரை வழியாக கேரளா செல்லும் அனைத்து லாரிகளும் இன்று நிறுத்தப்பட்டன. உள்ளூர் பகுதிகளில் பெரும்பாலான லாரிகள் இன்று ஓடியது. குறைந்த அளவு லாரிகளே ஓடவில்லை.
வேன்- லோடு ஆட்டோக்கள் போன்றவையும், பெரும்பாலானவை ஓடியது. செங்கோட்டை வழியாக கேரளா செல்லும் அனைத்து பஸ்களும் இன்று நிறுத்தப்பட்டன.
அதுபோல கேரளாவில் இருந்து செங்கோட்டை வரும் பஸ்கள் ஆரியங்காவு பணிமனையில் நிறுத்தப்பட்டன. அங்கிருந்து வரும் லாரிகள், கார் உள்பட எந்த வாகனமும் இன்று செங்கோட்டைக்குள் வரவில்லை.
இதனால் நெல்லை மாவட்டத்தில் இருந்து லாரிகள் மற்றும் வேன்கள், கார் போன்ற வாகனங்களும் கேரளா செல்லவில்லை. கேரளா செல்லும் பல லாரிகள் இன்று செங்கோட்டை,புளியரை கோட்டைவாசல், தென்காசி பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன.
மறியல் போராட்டம்
தென்காசி எல்.ஐ.சி.தபால் நிலையம் ,தாலுகா அலுவலகம் உள்ளிட்ட பகுதிகளில் ஆர்ப்பாட்டமும்,மறியலும் நடைபெற்றது. தென்காசியில் நடைபெற்ற மறியலில் 71 பெண்கள் உட்பட 175 பேர் கைது செய்யப்பட்டனர். செங்கோட்டையில் நடைபெற்ற மறியலில் 13 பெண்கள் உள்பட 84 பேர் கைது செய்யப்பட்டனர்.