பாரத் பந்த் ரூ. 25000 கோடி இழப்பு: இடது சாரிகள் மகிழ்ச்சி- பாதிப்பில்லை என்கிறது மத்திய அரசு…
சென்னை: விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்துவது உட்பட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய தொழிற்சங்கங்கள் மேற்கொண்ட நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டத்தில் 25000 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த வேலைநிறுத்தம் வெற்றி பெற்றதாக இடதுசாரிக் கட்சிகள் தெரிவித்துள்ளன. அதே நேரத்தில் பந்த் காரணமாக எந்தவித பாதிப்பும் இல்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
விலைவாசியை கட்டுப்படுத்துவது, பகுதிநேர ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியமாக ரூ.15 ஆயிரம் நிர்ணயிப்பது, புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்வது, அரசு வங்கிகள் தனியார் மயமாக்கம் மற்றும் அரசுத் துறை பங்குகளை விற்பதைக் கைவிடுவது என்பது உட்பட 12 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி நடைபெறும் இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில், நாடு முழுவதும் 15 கோடி பேர் இதில் பங்கேற்றனர்.
பந்த் வெற்றி
செய்தியாளர்களிடம் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் எஸ்.சுதாகர் ரெட்டி , "எதிர்பார்த்ததை விட பந்த் வெற்றிகரமாக நடைபெற்றது. தொழிலாளர்கள் வர்க்கத்தின் மிகப்பெரிய செயல்பாடு இது, மேலும் அரசின் தொழிலாளர் விரோதக் கொள்கைகளுக்கு எதிரான மிகப்பெரிய ஒற்றுமையான வெளிப்பாடு" என்று அவர் கூறியுள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி
மத்திய அரசு தொழிலாளர்கள் போராட்டத்தை தடுக்க முற்பட்ட போதிலும் இந்த பந்த் மிகப்பெரிய வெற்றியென்றே கருதுகிறோம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.ஆர்.எஸ்.எஸ். சார்பான பாரதிய மஸ்தூர் சங் தவிர மத்திய தொழிற்சங்க உறுப்பினர்கள் எவரையும் போராட்டத்துக்கு எதிராக திருப்ப முடியவில்லை என்றும் அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ரூ. 25000 கோடி இழப்பு
நாடு முழுவதும் நடைபெற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தினால் நேரடியாகவும், மறைமுகமாகவும் ரூ.25 ஆயிரம் கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது என்று இந்திய தொழில், வர்த்தக அமைப்பான (அசோசம்) தெரிவித்துள்ளது.
வங்கிப்பணிகள் பாதிப்பு
குறைந்த தொழிலாளர்களின் வருகை காரணமாக பல தொழிற்துறைகளின் உற்பத்தி பாதிக்கப்பட்டதாகவும், சில மாநிலங்களில் போக்குவரத்து முடங்கியதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதாகவும், வங்கி ஊழியர்களின் போராட்டம் காரணமாக, வங்கிப் பணிகள் முடங்கியதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதிப்பில்லையாம்
நாடு முழுவதும் நேற்று நடந்த தொழிற்சங்க வேலைநிறுத்தத்தால் இயல்பு வாழ்க்கையில் குறைந்த அளவு பாதிப்பே ஏற்பட்டதாக தொழிலாளர் நலத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. பல மாநிலங்களில் இவ்வேலைநிறுத்தத்தின் பாதிப்பு சற்றும் உணரப்படவில்லை என்றும் அந்த அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மத்திய அமைச்சகம் அறிவிப்பு
12 தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் உண்மையில் 7 தொழிற்சங்கங்களே இதில் பங்கேற்றதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது. பேச்சுவார்த்தை மூலம் தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொள்ள தொழிலாளர்கள் விரும்புகின்றனர் என்பதையும் வேலைநிறுத்தங்களை அவர்கள் விரும்பவில்லை என்பதையும் இது காட்டுவதாக அந்த அமைச்சகத்தின் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.