பாரத் பந்த் : தமிழகத்தில் இயல்பு வாழ்க்கை பாதிப்பில்லை: வெளிமாநில போக்குவரத்து பாதிப்பு
சென்னை: தொழிலாளர் நலச்சட்டத்தில் திருத்தம் செய்யும் முடிவைக் கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட 12 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று நடைபெற்ற நாடு தழுவிய வேலை நிறுத்தப்போராட்டத்தால் தமிழகத்தில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை.
இந்தியா முழுவதும் நடைபெற்ற இந்த பொது வேலைநிறுத்த போராட்டத்தில் 50க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்களை சேர்ந்த சுமார் 20 கோடி ஊழியர்கள், தொழிலாளர்கள் பங்கேற்றனர். தமிழகத்தில் மட்டும் சுமார் 30 லட்சம் பேர் இந்த வேலைநிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டனர் எனினும் இயல்பு வாழ்க்கையில் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.
தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். தொழிலாளர் நலச்சட்டங்களை அனைத்து தொழிலகங்களிலும் அமல்படுத்த வேண்டும். அமைப்புச் சாரா தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்பிற்கு வகை செய்யும் தேசிய பாதுகாப்பு நிதியம் அமைக்க வேண்டும்.
பொதுத்துறை பங்குகள்
பொதுத்துறை பங்குகளை விற்பதை கைவிட வேண்டும். புதிய ஓய்வூதிய சட்டம், சாலைப் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு சட்ட முன்வடிவு மற்றும் புதிய மின்சார சட்டம் ஆகியவற்றை திரும்ப பெற வேண்டும் உள்பட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்றைக்கு பொது வேலை நிறுத்தம் நடைபெற்றது.
50 அமைப்புகள் பங்கேற்பு
இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் தொமுச, சிஐடியு, ஏஐடியுசி, ஐஎன்டியுசி, ஹெச்எம்எஸ் உள்பட 11 தொழிற்சங்கங்கள், மத்திய, மாநில அரசு ஊழியர்கள் சங்கம், இன்ஸ்சுரன்ஸ் வங்கி, வருவாய்த்துறை, தபால்துறை, லாரி, தனியார் பஸ், ஆட்டோ, டிராவல்ஸ் கார் உரிமையாளர்கள் சங்கம், இரண்டு மற்றும் நான்கு சக்கர பழுதுபார்போர் சங்கம் உள்பட 50க்கும் மேற்பட்ட அமைப்புகள் கலந்து கொண்டன.
வங்கி ஊழியர்கள்
இந்த பந்த் காரணமாக சரக்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வங்கி ஊழியர்கள் மட்டும் 13 லட்சம் பேர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன்மூலம் வங்கிப் பணிகளில் பண பரிவர்த்தனை, காசோலை பரிமாற்றம் மற்றும் இதர சேவைகள் முடங்கின.
தமிழகத்தில் பந்த்
தமிழகத்தில் தொமுச, சிஐடியு, உள்ளிட்ட 11 தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன. இதேபோல் தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கம் மற்றும் பல்கலைக்கழக பேராசிரியர் சங்கங்கள் ஆதரவளித்தன.
ஆட்டோக்கள் இயங்கின
தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில் மட்டுமே ஆட்டோக்கள் இயங்கவில்லை. சென்னை நகர் முழுவதும் ஆட்டோக்கள் வழக்கம் போல இயங்கின. பேருந்து போக்குவரத்து பாதிக்கப்படவில்லை.
கர்நாடக மாநில பேருந்துகள்
பொது வேலை நிறுத்தம் காரணமாக கர்நாடகா மாநிலத்திற்கு தமிழகத்தில் இருந்து பேருந்தகள் இயக்கப்படவில்லை. ஓசூர் பேருந்து நிலையங்களில் பேருந்துகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் இருமாநிலங்களிடையே போக்குவரத்து முடங்கியது. மாலையில் பந்த் முடிந்த உடன் போக்குவரத்து சீரானது.
கன்னியாகுமரியில் பந்த்
கேரளாவிலும் வேலை நிறுத்தப்போராட்டம் காரணமாக தமிழகம்-கேரளா இடையிலான போக்குவரத்து பாதிக்கப்பட்டது. திருவனந்தபுரத்திலிருந்து கன்னியாகுமரி வரும் பேருந்துகள் நிறுத்தி வைக்கப்பட்டன. அதே போல் கன்னியாகுமரியிலிருந்து கேரளா செல்லும் பஸ்கள் களியக்காவிளை வரை மட்டுமே இயக்கப்பட்டன. இதனால் பயணிகள் மிகுந்த அவதிக்குள்ளாகினர். மாலை 6 மணிக்கு மேல் போக்குவரத்து சீரானது.