பூதப்பாடி அரசு பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஆசிரியர் கைது
ஈரோடு மாவட்டம் பவானியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியர் ஒருவர் 8-ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததால் அவர் பூச்சி மருந்து குடித்து கவலைக்கிடமான நிலையில் உள்ளார்.
பவானி: பவானியில் பூதப்பாடியில் உள்ள அரசுப் பள்ளியின் 8-ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த உடற்கல்வி ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.
பூதப்பாடியில் உள்ள மேல்நிலைப் பள்ளியில் ஆயிரக்கணக்கான மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் அப்பள்ளியைச் சேர்ந்த உடற்கல்வி ஆசிரியர் ஒருவர் 8-ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த மாணவி பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயற்சித்தார். இதை கண்ட பெற்றோர் அவரை மீட்டு பூதப்பாடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு தற்போது மாணவி மேல் சிகிச்சைக்காக கோவை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அங்கு அவருக்கு எந்த முன்னேற்றமும் இல்லாததால் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்களும், மாணவியின் உறவினர்களும் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
தகவலறிந்த போலீஸார் பள்ளிக்கு வந்தனர். அப்போது கிராம மக்கள் கூறுகையில், உடற்கல்வி ஆசிரியர் எங்கே உள்ளார் என்பது பள்ளி நிர்வாகத்துக்கு தெரியும். ஆனால் அவர்கள் எங்களுக்கு சொல்ல மறுக்கின்றனர். ஆசிரியரை காப்பாற்ற முயற்சிக்கின்றனர்.
ஒன்று ஆசிரியரை எங்கள் முன்னால் கைது செய்ய வேண்டும். இல்லையெனில் எங்களிடம் ஒப்படைக்க வேண்டும். அந்த ஆசிரியருக்கு கொடுக்கும் தண்டனையை பார்க்கும் மற்ற ஆசிரியர்களுக்கு தவறு செய்ய தோன்றாதபடி இருக்க வேண்டும் என்றும் மிகவும் ஆவேசத்துடன் பேசினர்.
மேலும் சாலையில் மறியல் போராட்டத்தை நடத்தியதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. தகவலறிந்த கோபி வருவாய் கோட்டாட்சியர், அந்தியூர் வட்டாட்சியர், கல்வி துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
மக்களின் தொடர் போராட்டத்தின் காரணமாக சம்பந்தப்பட்ட உடற்கல்வி ஆசிரியர் பிரபுவை போலீஸார் கைது செய்தனர்.