ஊரெல்லாம் அழியப் போகுதாம்.. இது "கலைஞர்".. மக்களெல்லாம் ஒரே மகிழ்ச்சி.. இது "ஜெயா"!
சென்னை: மழை ஏன்டா வந்தது என்று மக்களெல்லாம் காண்டாகிக் கிடக்கிறார்கள் சென்னையிலும், தமிழகத்தின் இதரப் பகுதிகளிலும். காரணம், மக்களின் வேதனையிலும், சோகத்திலும் ஏறி நின்று இந்த அரசியல்வாதிகளும், அவர்களின் ஆதரவு ஊடகங்களம் செய்த அரசியல்தான். கிட்டத்தட்ட செத்த பிணத்தின் மீது அரசியல் செய்வது போல அசிங்கமாகவும், கேவலமாகவும் நடந்து கொண்டன இந்த அரசியல் ஆதரவு ஊடகங்கள்.
கலைஞர் டிவி - ஜெயா டிவி.. கடந்த சில நாட்களில் இந்த இரு டிவிகளை மட்டும் மாறி மாறி பார்த்த யாராக இருந்தாலும் ரத்தம் கக்கி செத்திருப்பார்கள் அல்லது மூளையில் உள்ள குழாய்கள் வெடித்து பைத்தியமாகி இருப்பார்கள். அப்படி ஒரு பைத்தியக்காரத்தனமான முறையில் இரு டிவி சேனல்களும், சற்றும் சமூகக் கவலையோ, பொறுப்போ, அக்கறையோ இல்லாமல் மழை குறித்த செய்திகளை ஒளிபரப்பின.
ஒரு டிவி என்னவென்றால் தமிழகமே அழியப் போகிறது, மக்கள் எல்லாம் நீரில் மூழ்கிச் சாகப் போகிறார்கள் என்று ஒப்பாரி வைத்தது. அழிந்து விட்டது போன்ற உணர்வைக் கொண்டு வருவதற்காக சோக மியூசிக் எல்லாம் போட்டு பிரமிப்பூட்டினார்கள். அது கலைஞர் டிவி என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
மறுபக்கம் மக்கள் எல்லாம் மகிழ்ச்சிக் கடலில் மூழ்கியிருப்பதாகவும், மழையை ஆனந்தமாக வரவேற்பதாகவும், ஆட்சியாளர்கள் எடுத்த நடவடிக்கையால் மக்களுக்கு எந்தத் துயரமும் ஏற்படவில்லை என்றும் சொல்லிச் சொல்லி புளகாங்கிதப்பட்டனர். அவர்கள் ஜெயா டிவி குரூப் என்பதையும் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
ஆனால் மக்கள் பார்த்த தமிழகம் வேறு.. மக்கள் சந்தித்த சூழ்நிலைகள் வேறு. அந்த சூழலை உள்ளது உள்ளபடி இந்த இரு ஊடகங்களும் மக்களுக்குச் சொல்லவில்லை. இவர்கள் மட்டுமல்லாமல் இவர்கள் சார்ந்த கட்சிகளின் ஆதரவு ஊடகமும் கூட ஒரு தலைபட்சமாகத்தான் செய்திகளைக் காட்டி வந்ததே தவிர யாருமே உண்மையை உண்மையாக சொல்லவில்லை என்பது சென்னைவாசிகளுக்குத் தெரியும்.
முழுக்க முழுக்க அரசியல்
கலைஞர் டிவி, ஜெயா டிவி மற்றும் இன்னும் சில டிவி சேனல்கள் மழை குறித்த செய்திகளைச் சொன்னபோது, எப்படி மழை நீரில் சாக்கடை கலந்து மக்களைக் கஷ்டப்படுத்தியதோ அதேபோல இவர்களும் செய்திகளில் அரசியலையும் கலந்து கொடுத்தபோது மக்கள் கிட்டத்தட்ட செத்தே போனார்கள்.
அய்யகோ.. !
கலைஞர் டிவியை மட்டும் யாராவது பாரீன் காரர் திடீரென போட்டுப் பார்த்திரு்நதால் அதிர்ச்சியில் அப்படியே ஷாக் ஆகியிருப்பார். காரணம், ஏதோ, தமிழகமே இந்த மழை வெள்ளத்தில் சிக்கி அழிந்து விட்டதைப் போன்ற எபக்டில் செய்திகளைக் கொடுத்தது கலைஞர் டிவி.
பிரளயமா வந்து விட்டது
பெய்தது ஒரு பலத்த கன மழை.. அவ்வளவுதான். இதை சென்னை மக்களே சாதாரணமாக எடுத்துக் கொண்டனர். 2005ல் பெய்ததை விட 2 மடங்கு பெரிய மழை அவ்வளவுதான். ஆனால் ஏதோ பிரளயமே வந்து விட்டதைப் போல ஜேம்ஸ் கேமரூனாக மாறி "சீன்"போட்டு பயமுறுத்தியது கலைஞர் டிவி.
எல்லாரும் செத்தப் போகப் போறீங்கப்பா
தமிழகம் அழியப் போவது என்பது போலவும், யாருமே நம்மைக் காப்பாற்ற வர மாட்டார்கள் என்றும், வெள்ளம் பாதித்த பகுதிகளை ஏதோ சுனாமி பாதித்த பகுதிகளைப் போல காட்டியும், மக்களை பெரும் குழப்பத்திலும், பீதியிலும் ஆழ்த்தியது கலைஞர் டிவி.
சோக மீஜிக் வேற
இதில் செய்திகளின்போது பீகாரில் வெள்ளம் என்று அந்தக் காலத்தில் தியேட்டர்களில் காட்டுவார்களே செய்திப் படம் அதுபோல.. கனத்த குரலில் சோகமான பின்னணி இசையுடன் வேறு காட்டி சென்னைக்கு அப்பால் இருந்த மக்களையெல்லாம் பயந்து அலற வைத்தது கலைஞர் டிவி.
எல்லாத்துக்கும் காரணம் அரசுதானாம்
இந்த மழை வெள்ளத்துக்கும், அதனால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கும் அரசு தான் காரணம். அரசு இயந்திரம் மக்களை கைவிட்டு விட்டது என்றும் அலறினர் கலைஞர் டிவி செய்தியாளர்கள். சென்னை மக்களின் வாழ்க்கையே அழிந்து விட்டது போலவும் எக்ஸ்ட்ரா பிட்டுகளையும் போட்டு விட்டனர் கலைஞர் டிவியினர்.
இது அதுக்கும் மேல
மறுபக்கம் ஜெயா டிவியில் அப்படியே உல்டாவாக செய்திகள் வந்தன. அதாவது மழையே பெய்யலையே என்ற ரேஞ்சுக்கு இவர்களது செய்தி இருந்தது. இது அதை விட ரொம்பக் கேவலமான கவரேஜ் என்பதில் சந்தேகமே இல்லை.
சந்தோஷ வெள்ளத்தில்தானே மிதக்கிறாங்க பாஸ!
மக்கள் எல்லாம் மழையை வரவேற்று சந்தோஷ வெள்ளத்தில் மிதப்பது போல செய்தி போட்டு பயமுறுத்தியது ஜெயா டிவி. அரச இயந்திரம் முழு வீ்ச்சில் பணியாற்று வருவதாகவும் இது விடாமல் கதறியது.
சின்ன மழைக்குப் போய்
மேலும் ஒரு மழையைப் போய் எதிர்க்கட்சிகள் இப்படி பெரிதாக்குகின்றனவே என்றும் கூறி அட்டாக் செய்தனர் எதிர்க்கட்சி ஊடகங்களை. அதை சிலரை விட்டும் சொல்லச் சொல்லியும் புல்லரிக்க வைத்தது ஜெயா டிவி.
பூராம் பொய்யப்பு
மேலும் எதிர்க்கட்சியினர் கூறுவது அம்புட்டும் பொய் என்றும் சொன்னது ஜெயா டிவி. அதில் பேசிய யாருமே மழை வெள்ளத்தால் ஒரு பாதிப்பையும் சந்தித்ததாக கூறவே இல்லை. ஒரு சொட்டு மழைத் துளி கூட தங்கள் மீது படவில்லை என்ற தோரணையில் அவர்கள் சிரித்தபடி பேசியதுதான் மக்களை வியர்க்க வைத்தது.
லீவு செய்தி லீடு செய்தி
எதிர்க்கட்சிகளின் செய்திகளை அமுக்க மாணவர்களுக்கு மகி்ழ்ச்சி தந்த பள்ளிக்கூட விடுமுறைச் செய்தியை பெரிதாகவும், அடிக்கடியும் காட்டி அட்டாக் செய்தது ஜெயா டிவி.
இவிங்க பரவாயில்லை
இவர்களைப் போலவே இன்னும் சில சானல்களும் கூட பாரபட்சமான முறையில்தான் செய்திகளைக் காட்டினரே தவிர உண்மையை அப்படியே காட்ட யாரும் முன்வரவில்லை. அதேசமயம், மழைச் செய்தியை மழைச் செய்தியாக தந்த சில சேனல்களையும் காண முடிந்தது.
சபாஷ்டா சபாபதி!
கலைஞர், ஜெயா டிவி செய்திகள் எதிரும் புதிருமாக இருந்ததும், அரசியல்வாதிகள் மழை வெள்ள பாதிப்பு, நிவாரணம் குறித்துப் பேசியதும் மக்களுக்கு ஒன்றை மட்டும் புரிய வைத்தது.. வெள்ளத்தி்ல் சிக்கி மிதந்தாலும், காப்பாற்றக் கை கொடுப்பதற்கு முன்பு நாலு வார்த்தை அரசியல் பேசாமல் இந்த அரசியல்வாதிகளால் இருக்க முடியாது என்பதே அது.