அப்துல் கலாம் நினைவிடத்தில் குரான்.. பைபிள் வைப்பு.. உளவுத் துறையினர் விசாரணை
அப்துல் கலாம் நினைவிடத்தில் குரான் மற்றும் பைபிள் ஆகிய நூல்கள் வைக்கப்பட்டதை அடுத்து உளவுத் துறையினர் விசாரணை நடத்தினர்.
ராமேஸ்வரம்: அப்துல் கலாம் நினைவிடத்தில் குரான் மற்றும் பைபிள் வைக்கப்பட்டது தொடர்பான உளவுத் துறையினர் ஊழியர் மற்றும் உறவினர்களிடம் விசாரணை நடத்தினர்.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தை அடுத்த தங்கச்சிமடத்தில் பேய்க்கரும்பு பகுதியில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் நினைவிடத்தில் மத்திய அரசின் பாதுகாப்பு துறை சார்பில் ரூ.15 கோடி செலவில் மணிமண்டபம் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ளது. இந்த மணி மண்டபத்தை பிரதமர் மோடி கடந்த 27ம் தேதி திறந்து வைத்தார்.
அப்துல் கலாம் வீணை வாசிப்பது போன்றும் பகவத் கீதை பக்கத்தில் இருப்பது போன்றும் சிலை அமைக்கப்பட்டிருந்தது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும், தமிழகத்தில் உள்ள அரசியல் தலைவர்கள் மு.க. ஸ்டாலின், வைகோ என அனைவரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
மேலும், அப்துல் கலாம் சாதி, மத, இன, மொழி என அனைத்திற்கும் அப்பாற்பட்டவர், பகவத்கீதை வைக்கப்பட்டது தவறு என்றும் பொதுமக்களும் தங்களது வருத்தங்களைத் தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில், அப்துல்கலாம் வீணை வாசிப்பது போன்ற சிலையில் இடம்பெற்றுள்ள பகவத் கீதை அருகில் இஸ்லாமின் புனித நூலான குரான் மற்றும் கிறிஸ்துவ புனித நூலான பைபிள் ஆகியவை வைக்கப்பட்டன.
இதனை எதிர்த்து இந்து மக்கள் கட்சி போலீசாரிடம் புகார் அளித்தனர். இதனால் மீண்டும் பரபரப்பு உருவானது. இந்நிலையில், உளவுத் துறையினர் குரான் மற்றும் பைபிள் வைக்கப்பட்டது குறித்து அப்துல் கலாம் நினைவிடத்திற்குச் சென்று விசாரணை நடத்தியுள்ளனர். நினைவிடத்தில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் அப்துல் கலாமின் குடும்பத்தினரிடம் உளவுத் துறையினர் விசாரணை நடத்தினர்.