புதுவையில் 28-ந் தேதி ராஜ்யசபா தேர்தல்- பா.ஜ.க.வுக்கு விட்டுக் கொடுப்பாரா ரங்கசாமி?
புதுச்சேரி: புதுவை யூனியன் பிரதேசத்தில் ஒரு ராஜ்யசபா எம்.பி. சீட்டுக்கான தேர்தல் வரும் 28-ந் தேதி நடைபெற உள்ளது. இந்த ஒரு இடத்தை ஆளும் என்.ஆர். காங்கிரஸே கைப்பற்றுமா? அல்லது பாரதிய ஜனதா கட்சிக்கு விட்டுக் கொடுக்குமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
புதுச்சேரி ராஜ்யசபா எம்.பி.யான காங்கிரஸ் கட்சியின் கண்ணன் பதவிக் காலம் அக்டோபர் 6-ந் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து அந்த ஒரு இடத்துக்கான தேர்தல் வரும் 28-ந் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
28-ந் தேதி தேர்தல்
இது தொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
ராஜ்யசபா தேர்தலில் போட்டியிடுவதற்கான மனு தாக்கல் வரும் 10-ந் தேதி தொடங்கி 18-ந் தேதி வரை நடைபெறும். வேட்புமனுக்கள் 19-ந் தேதி பரிசீலனை செய்யப்பட்டு வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.
அதைத் தொடர்ந்து 21-ந் தேதி மனுக்களை வாபஸ் பெற கடைசி நாளாகும். வாபஸ் பெற்ற மனுக்களை தவிர, மற்றவர்களின் பட்டியலோடு, வரும் 28-ந் தேதி தேர்தல் நடைபெறும். அன்று மாலை 5 மணிக்கே வாக்குகள் எண்ணப்படும். அதைத் தொடர்ந்து அக்டோபர் 3-ந் தேதி தேர்தல் முடிவு அறிவிக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சட்டசபை நிலவரம்
புதுச்சேரி சட்டசபையில் கட்சிகள் நிலவரம்:
ஆளும் என்.ஆர்.காங். - 16 எம்.எல்.ஏக்கள் (15 என்.ஆர். காங். , 1 சுயேட்சை
காங்கிரஸ்- 7
அ.தி.மு.க. - 5
தி.மு.க. - 2
விட்டுக் கொடுப்பாரா ரங்கசாமி?
மொத்தம் உள்ள 30 எம்.எல்.ஏ.க்களில் 16 பேர் ஆதரவு இருப்பதால் ஆளும் என்.ஆர். காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்தான் ராஜ்யசபா தேர்தலில் வெல்லும் வாய்ப்பிருக்கிறது. அதே நேரத்தில் இந்த இடத்தை பா.ஜ.க.வுக்கு முதல்வர் ரங்கசாமி விட்டுக் கொடுப்பாரா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
அண்மையில் புதுச்சேரி வருகை தந்த பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் அமித்ஷா இது தொடர்பாக முதல்வர் ரங்கசாமியுடன் ஆலோசனை நடத்தியிருந்தார். ஆனால் ரங்கசாமியோ, கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திவிட்டு சொல்வதாக கூறியிருந்தார்.
காத்திருக்கும் பா.ஜ.க.
ராஜ்யசபாவில் சிறுபான்மையாக உள்ள பாரதிய ஜனதா கட்சி வாய்ப்பு கிடைக்கும் மாநிலங்களில் இருந்து எம்.பி.க்களை பெறுவதற்கு தீவிரமாக முயற்சிக்கிறது. இதனடிப்படையில்தான் புதுவையில் இருந்து ஒரு ராஜ்யசபா எம்.பி.யை பெற்றுவிடுவது என்பதில் தீவிரமாக இருக்கிறது.
இருப்பினும் ஆளும் என்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏக்களோ, பா.ஜ.க.வுக்கு விட்டுக் கொடுக்கக் கூடாது என்பதில் உறுதியாக உள்ளனர். இதனால் முதல்வர் ரங்கசாமியின் முடிவுக்காக காத்திருக்கிறது பா.ஜ.க. மேலிடம்.