திருச்சி மாநாடு: ரஜினி வராமலேயே, அழைக்காமலேயே திரண்ட பெரும் கூட்டம்!
திருச்சி: காந்திய மக்கள் இயக்கம் சார்பில் திருச்சியில் நடந்த மாநாடு அரசியல் வட்டாரத்தில் பெரும் ஆச்சர்யத்தை, தாக்கத்தை உண்டாக்கியுள்ளது.
காரணம் இந்த மாநாட்டுக்குக் குவிந்த கூட்டம் மற்றும் போலீஸ் கெடுபிடிகளுக்கு அவசியமின்றி அவர்கள் நடந்து கொண்டவிதம்.
இது ரஜினிகாந்தின் அரசியல் வருகை பற்றி அறிவிக்க, ரஜினி அரசியலுக்கு வந்து என்ன செய்ய நினைக்கிறார் என்பதை அறிவிக்க நடத்தப்பட்ட கூட்டம். ஆனால் இந்தக் கூட்டத்துக்கு அனைவரும் செல்லுங்கள் என்று ரஜினியோ, அவரது ரசிகர் மன்றத்தின் தலைமை நிர்வாகியோ அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை. அதேபோல ரஜினியோ அவரது நண்பர்களோ கூட கலந்து கொள்ளவில்லை.
Recommended Video
ஆனாலும் தமிழகம் முழுவதிலும் இருந்து தங்கள் சொந்த செலவில் பேருந்து, வேன், கார்கள் மூலம் பல ஆயிரம் ரசிகர்கள் நேற்று திருச்சியில் வந்து குவிந்துவிட்டனர்.
ஈரோடு மாவடத்தைச் சேர்ந்த ரஜினி மன்ற நிர்வாகிகள் பைக் முருகேஷ், சாம்ராஜ் ஆகியோர் 100க்கும் அதிகமான வாகனங்களில் தங்கள் பகுதி மக்களை அழைத்து வந்திருந்தனர்.
"நாங்கள் யாருக்கும் பணம் தரவில்லை. இவர்களில் ரசிகர்கள் மட்டுமல்ல, பொதுமக்களும் உண்டு. விருப்பமிருப்பவர்கள் வாங்க என்று அழைத்தோம். வந்தார்கள். குறுகிய கால ஏற்பாடு இது. ரஜினிகாந்த் அதிகாரப்பூர்வமாக வரச் சொல்லியிருந்தால், நிலைமையே வேறு..," என்றார் சாம்ராஜ்.
வேலூர் மாவட்ட தலைவர் சோளிங்கர் ரவியும் 100-க்கும் அதிகமான வாகனங்களில் ரசிகர்களை அழைத்து வந்திருந்தார்.
விழுப்புரம், திருப்பூர், சேலம், மதுரை, நெல்லை என பல மாவட்ட ரசிகர்களும் மாநாட்டுக்கு வந்திருந்தனர்.
மாலை 6 மணிக்குத்தான் கூட்டம் ஆரம்பமாவதாகச் சொல்லியிருந்தனர். ஆனால் 4 மணிக்கே குவிந்துவிட்டனர். சரியாக 8.45க்கெல்லாம் கூட்டம் முடிந்ததால், மக்கள் திரும்பிச் செல்வது சுலபமாக இருந்தது. போலீசுக்கும் வேலையில்லாமல் போனது.
மாநாட்டுத் திடலிலோ, வெளியிலோ மதுப்புட்டிகள் இல்லாதது இன்னொரு ஆச்சர்யம்.
மொத்தத்தில் ரஜினியின் அரசியல் வருகையை உறுதி செய்த இந்த முதல் மாநாடு, ரஜினி பங்கேற்காமலேயே, பெரிய வெற்றியாக அமைந்துவிட்டது.